நிதிச் சலவையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை நிதிச் சலவை சட்டத்தின் அடிப்படையில் கோதபாய ராஜபக்ஸவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பணம் சட்டவிரோதமான வழிகளில் பரிமாறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈட்டிய பணத்தை அரசாங்க கணக்குகளில் வைப்பிலிடாது, கோதபாய சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டுக்கொண்டுள்ளதாகவும் பல பில்லியன் ரூபா பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோதபாயவை கைது செய்யவது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ரக்னா லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பாரியளவில் பணம் திரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோதபாய ராஜபக்ஸ, பாரியளவில் பணத்தை சட்டவிரோதமான முறையில் ஈட்டியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர். இந்த நிறுவனம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என கோதபாய ராஜபக்ஸ வெளிக்காட்டிக்கொள்ள முயற்சித்த போதிலும் உண்மையில் இந்த நிறுவனம் கோதபாயவிற்கு சொந்தமான ஓர் தனியார் நிறுவனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கல்களில் தனியார் நிறுவனமொன்று ஈடுபட வேண்டுமாயின், பாராளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற போதிலும், ரக்னா லங்கா நிறுவனம் அவ்வாறான அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை.
கோதபாய ராஜபக்ஸ பயங்கரவாதிகள் மற்றும் கடற் கொள்ளையர்களுடன் தொடர்புகளைப் பேணியமை தொடர்பில் சர்வதேச காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கையிடமும் இது குறித்து உதவி கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் வாரமளவில் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Social Buttons