Latest News

February 27, 2015

பாராளுமன்றம் ஏப்.23 கலைப்பு!
by Unknown - 0

ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் 23ம் திகதியுடன் ஒட்சிசன் நிறைவடைவதாகவும் தெரிவித்த கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு சகலரையும் ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சி பொதுத் தேர்தலுக்கு தயார் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்தப் பாராளுமன்றத்தின் மக்கள் ஆணை 23ம் திகதி முடிவடைகிறது. நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்வதற்காக 100 நாள் வேலைத்திட்டமொன்றை முன்வைத்தோம்.

இதனடிப்படையில் ஏப்ரல் 23ம் திகதி 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒட்சிசன் நிறைவு பெற்று 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும். தேர்தல் நடக்கும் திகதிக்கு ஏற்ப இந்த திகதியில் மாற்றம் செய்யப்படலாம்.

ஏப்ரல் 23ம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கூடவும் முடியாது. பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். இந்தப் பாராளுமன்றம் ஜனவரி மாதம் 8ம் திகதி கலைக்கப்பட இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டதால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டது.

மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எமக்கொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தார்கள். இந்த 100 நாட்களில் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவும் இருந்தது. அவ்வாறே ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணக்கூடியதாகவும் இருந்தது.

அவ்வாறே, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கும் அரசிலமைப்பு திட்டத்தை மாற்றுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எமக்கு இந்த விடயங்களை முன்னெடுக்க ஆதரவு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் மார்ச் மாதம் எமது தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். இதனடிப்படையில் மார்ச் முதல் வாரத்தில் அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன் இம்முறை சகலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எமது கட்சியின் செயற்குழு அங்கத்தவர்கள் தேர்தலில் எவ்விதம் செயற்பட வேண்டுமென்பது தொடர்பாக நேற்று கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் எமது அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து போட்டியிட உள்ள சிறுகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதுடன் அவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் ஆசனங்கள் பிரித்து கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அடுத்து வரக்கூடிய பாராளுமன்றத்தில் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவோம். அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து நல்லாட்சிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பலமாக இருக்கும் வகையில் அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, எதிர்வரும் நாட்களில் இருந்து சிறிகொத்தவில் இருந்து எமது தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் அடுத்த வாரத்தில் இருந்து ஊடகவியலாளர் மாநாடுகளும், தேர்தல் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படும். இதனடிப்படையில் நாங்கள் பொதுத் தேர்தலுக்கு தயார் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
« PREV
NEXT »