Latest News

February 09, 2015

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை -உலகெங்கும் பரந்து வாழும் இனிய தமிழ் உறவுகளுக்கு ஒரு மடல்..
by admin - 0


உலகெங்கும் பரந்து வாழும் இனிய தமிழ் உறவுகளுக்கு ஒரு மடல்...



யாழில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை தீவிரமடைந்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.. அதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தரப்பினராலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. அதற்கு இன்னும் வலுச்சேர்க்கும் வண்ணம் இலங்கை தலைநகர் கொழும்பிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று 15/02/2015 ஞாயிறு முற்பகல் 9.00 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.


 எமது இனத்தின் இருப்பு ஏற்கனவே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், தற்போது ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையானது எம்மினத்தின் இருப்பினை முற்றாக அழித்துவிடும். ஆகவே ஒரு இனத்தின் இருப்பிற்கு மிகவும் அவசியமான குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். 



நண்பர்களே, உறவுகளே அரசியல் கலப்பற்ற அர்ப்பணிப்பான இப்போராட்டத்தில் கரம் கோருங்கள்.. எமது உரிமையை எமது இருப்பை நாம் தான் உறுதி செய்யவேண்டும்! 

சம நேரத்தில் யாழிலும் ஒரு மிகத்தீவிரமான கவனயீர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்தல் காலத்தின் தேவையாகும். இதற்கு யாழ் பல்கலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர் சங்கங்கள், பொது அமைப்புகள் , விளையாட்டு கழகங்கள், சனசமூக நிலையங்கள் என அனைத்து தரப்பினரதும் பூரண ஒத்துழைப்போடு அரசியல் கலப்பற்று தீவிரமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். 

ஆகவே எம் இனிய உறவுகளே... 
இத்தகவல்களினை சமூக வலைத்தளங்கள் வாயிலாக உங்கள் நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் பகிர்வதன் மூலம் நீங்களும் ஓர் கடமையினை நிறைவேற்றியவராகுங்கள். சமூக வலைத்தளங்கள் தற்கால உலகிலே மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியிருப்பதனை நீங்கள் கண்டிருப்பீர்கள். அரபுலக வசந்தம் எனும் அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுக்கு இச்சமூக வலைத்தளங்களே காரணமாகும். ஆகவே எமது மண்ணிலும் மகிழ்ச்சி ஏற்பட, எம்மண்ணில் எம் பரம்பரை நிலைத்து வாழ எமது மண்ணிலும் வசந்தம் வீச நீங்களும் இத்தகவல்களினை எல்லோருக்கும் பகிர்ந்து இப்போராட்டத்தில் கரம் கோர்த்து ஆதரவளியுங்கள்.


« PREV
NEXT »