ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பசில் ராஜபக்ச செயற்படுத்தி வந்த சகல பொறுப்புகளும் கோத்தபாய ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தெரியவருவதாவது,
ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான சகல விடயங்களையும் பொறுப்புடன் செயல்படுத்தி வந்த பசில் ராஜபக்ச, கட்சி மாறிய திஸ்ஸ அத்தநாயக்காவிற்கு சுகாதார அமைச்சை கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
அவரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, திஸ்ஸ அத்தநாயக்காவை சுகாதார அமைச்சராக்கியதால், தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் பொறுப்பை பசில் ராஜபக்சவிடமிருந்து எடுத்து கோத்தாபாய ராஜபக்சவிற்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல பிரசார வேலைகளுக்கும் கோத்தாபாயவே பொறுப்பாக இருக்கும் முகமாகவே தொலைகாட்சி நேரடி கலந்துரையாடல்களில் கோத்தபாய ராஜபக்சவே கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் தொடர்பாக தபால் மூல வாக்களிப்பிற்கு முன் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடபெறவிருக்கும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புகளில் கோத்தாபாயவே கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்காரணங்களினாலேயே மீரியாபெத்த வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கும் கோத்தாபாய ராஜபக்ச சென்றதாகவும் தெரியவருகின்றது.
பசில் ராஜபக்சவை ஜனாதிபதி ஓரங்கட்டி வருவதாக பேசப்படுகின்றது.
திஸ்ஸ அத்தநாயக்கவின் சுகாதார அமைச்சர் நியமனத்தால் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு வாக்களிப்பில் பின்னடைவு ஏற்படும் என்று பசில் ராஜபக்ச ஜனாதிபதிக்கு தெரிவித்தும் அதை அவர் கணக்கெடுகாததும் ஓர் காரணம் என்றும் கூறப்படுகின்றது.
தற்பொழுது பாதுகாப்பு செயலாளர் அதிக ஆர்வத்துடன் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருவதாகவும் இவர் எதிர்வரும் நாட்களில் மிக முக்கிய பொறுப்புடன் ஜனாதிபதி தேர்தல் விடயங்களின் பரப்புரைகளுக்கு பொருப்பாக செயல்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தேர்தல் கடமைகளுக்கு சிவில் படை, பொலிஸ் படை, பாதுகாப்பு படையினர் உதவிகளையும் கோத்தபாய பெற்றுக்கொள்வார் என்றும் இன்று ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Social Buttons