விடுதலைப் புலிகள் இயக்கம் பொதுமக்களின் பேராதரவு பெற்ற ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் மீது விதித்திருந்த தடையைத் தற்போது விலக்கிக் கொண்டிருக்கிற ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், இந்திய அரசின் நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ளது.
இந்திய அரசு, இலங்கை பிரச்சினையில், ஒரு சார்பான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறது என்றும், எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசு முன்வைக்கும் கருத்துகளில் நம்பிக்கை இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி சர்வதேச நாடுகளை நம்ப வைத்துள்ளது. அதனடிப்படையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடுதலைப்புலிகள் மீது தடைவிதித்திருந்தது.
தற்போது, சட்டபூர்வமாக விசாரணை நடத்தியதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் அக்கருத்தை மாற்றிக்கொண்டு, புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளனர். இந்திய அரசம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் புலிகளின் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டு மென்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கம் வெகுமக்களின் பேராதரவு பெற்ற ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம் எனவும் இந்திய அரசு அங்கீகரிக்க ஏற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons