புகழ்மிக்க தென்னாப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஆஸ்டர் பிஸ்டோரியஸ் மீது திட்டமிட்ட கொலையின் வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்தல் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
தவறுதலாக தனது காதலி ரீவா ஸ்டீன்காம்ப்பை பிஸ்டோரியஸ் கொன்றிருந்தார் என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
ஆஸ்கர் பிஸ்டோரியஸ் திட்டமிட்டு தனது காதலியைக் கொன்றிருக்கவில்லை என வியாழனன்றே நீதிபதி தெரிவித்திருந்தார்.
கழிவறையில் இருப்பது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வெளியாள் என தவறுதலாக நம்பி ஆளையே பார்க்காமல் கதவு முன்னாலிருந்தபடி பிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டது அலட்சியமான செயல் என்று நீதிபதி தொகொஸிலே மஸிபா வெள்ளியன்று கூறினார்.
ரீவா ஸ்டீன்கேம்ப்பை கொல்லும் எண்ணம் பிஸ்டோரியஸுக்கு இருந்தது என்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.
உணவு விடுதி ஒன்றில் அலட்சியத்துடனும் கவனக் குறைவுடனும் துப்பாக்கியைச் சுட்டிருந்தார் பிஸ்டோரியஸ் என்ற வேறொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
உறுதிசெய்யப்பட்டுள்ள குற்றங்களுக்காக நீதிமன்றம் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரையிலான தண்டனையை பிஸ்டோரியஸுக்கு வழங்க முடியும். ஆனால் தண்டனைகளை சில நாட்கள் கழித்து நீதிபதி அறிவிப்பார்.
Social Buttons