விடுமுறைக்குத் சொந்த இடங்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தமிழர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து தீவிரமாக விசாரித்து அச்சுறுத்தி வருகின்றனர். தற்பொழுது நல்லூர் கந்தன் உள்ளிட்ட பிரசித்திபெற்ற ஆலயங்களில் வருடந்த பெருந்திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் உறவுகளில் பலர் தாயகத்திற்கு வந்து உறவுகளுடன் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இராணுவப் புலனாய்வுத் துறையினர் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்தவர்களை இலக்கு வைத்து தீவிரமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கியிருக்கின்ற வீடுகளுக்குத் தேடிச்செல்லுகின்ற புலனாய்வாளர்கள், அவர்களிடம் வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணுகின்றீர்களா?, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டீர்களா?, கடந்த காலத்தில் ஏதாவது ஆயுதப்போராட்ட இயக்கங்களில் அங்கம் வகிக்கின்றீர்களா? போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர். இதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை குடும்பமாக புகைப்படமும் எடுத்துள்ளனர். இதனால் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அச்ச உணர்வினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons