உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்தவரான ஜேர்மனி வீரர் மிரஸ்லாவ் குளோஸ் (Miroslav Klose) கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உலக் கிண்ண தொடரின்போது தனது 16 ஆவது உலகக் கிண்ண கோலை அடித்து உலக சாதனையை படைத்தார் குளோஸ். 36 வயதான குளோஸின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன ஜேர்மனி உலகக் கிண்ணத்தையும் வென்றது.
உலகக் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் ஜேர்மனிய வீரர்கள் உள்ள நிலையில், அணியின் முன்னணி வீரரான குளோஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரேசில் நாட்டில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் எனது சிறுவயது கனவு நிறைவேறியுள்ளது. ஜேர்மனியின் தேசிய அணிக்காக விளையாடிய தருணங்களை மறக்க முடியாது.
எனது சிறந்த கோலையும் அடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 2002 உலகக் கிண்ணத் தொடரில் குளோஸ், 5 கோல்களையும் 2006 தொடரில் 5 கோல்களையும், 2010 இல் 4 கோல்களயைும், 2014 தொடரில் 2 கோல்களையும் குளோஸ் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்கு உலகக் கிண்ணத் தொடர்களில் கோல்கள் அடித்த அரிதான வீரர் குளோஸ். ஜேர்மனி வீரராக 137 போட்டிகளில் விளையாடி 71 கோல்களை பெற்றுள்ளார். ஜேர்மனி சார்பாக அதிக கோலடித்த வீரராகவும் விளங்குகிறார்.
Social Buttons