Latest News

July 03, 2014

புத்தரின் உருவத்தை பச்சை குத்திய பிரித்தானிய பெண்ணின் மனு விசாரணைக்கு ஏற்பு
by Unknown - 0

இலங்கைக்கு வருகைதந்த பிரித்தானிய பெண்ணொருவரின் இடதுகையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்த காரணத்தினால் அவர் நாடு கடத்தப்பட்டார்.

இதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான சலீம் மர்சூக், சந்திரா ஏக்கநாயக்க மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவை பிரித்தானிய பிரஜையான நவோமி மிஷெல் கோல்மன்ஸ் தாக்கல் செய்திருந்தார்.
37 வயதான இந்த பெண், பிரித்தானியாவில் தாதி உத்தியோகத்தராக சேவை புரிவதாகவும், பௌத்த தர்மம் தொடர்பில் மிகுந்த பக்தி கொண்டிருப்பதாகவும், அதன் பிரகாரமே பச்சை குத்திக்கொண்டு, தியானம் புரிவதற்காக இலங்கைக்கு தாம் வருகை தந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண் நாட்டிற்கு வருகைந்த பின்னர், கையில் பச்சைக் குத்தப்பட்டிருப்பதை அவதானித்த சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸார், அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து தன்னை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும், சுற்றுலாப் பயணியாக வருகை தந்த ஒருவரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நீதவானுக்கு அதிகாரம் இல்லையென்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டிருந்தபோது பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு தான் உட்படுத்தப்பட்டதாகவும், இதனால் தனக்கு ஏற்பட்ட மனக் கவலை மற்றும் துஷ்பிரயோகங்களுக்காக அரசாங்கத்திடமிருந்து பத்து மில்லியன் ரூபா இழப்பீடு பெற்றுத்தருமாறு நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
« PREV
NEXT »