போர் நடைபெற்ற நாடுகளில், போரின் போது நடந்த குற்றங்களைக் கண்டறிந்து தண்டனை அல்லது மன்னிப்பு வழங்குவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு முயற்சிப்பது மிக முக்கியமானது.
அதேவேளை போரில் பாதிக்கப்பட்டவர்களுடைய உரிமைகளை, அவர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான புனர்வாழ்வு விடயங்களைக் கவனிப்பதும் இன்றியமையாதவொன்றாகும். ஆயினும் இவ்வாறான போருக்குப் பின்னான சூழ்நிலையில் முழுமையான புனர்வாழ்வு கவனிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரியது.
இங்கே முழுமையான புனர்வாழ்வு என்று குறிப்பிடுவது பாதிக்கப்பட்டவர்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மீளக்கட்டியெழுப்புவதும் உளசமூக கலாசாரம் அம்சங்களைக் கவனிப்பதுமாகும்.
பொதுவாக அபிவிருத்தியில் இருந்து மக்கள் பயனைப் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமாயினும் பாதிப்புக்களுக்கு உட்பட்ட நிலையில் உள்ளவர்கள் வெறும் பொருளாதார அபிவிருத்திகளால் எதிர்பார்க்கப்பட்ட முழுமையான பயனைப் பெறாமல் போவதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கௌதமாலா (Guatemala). சியராலியோன் (Sierra Leone), கிழக்குத் தீமோர் (East Timor), கொலம்பியா (Colombia) போன்ற நாடுகளை பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு முதலிடம் கொடுக்கும் நாடுகளாகக் கிறிஸ்டின் இவான்ஸ் (Christine Evans-2012) குறிப்பிடுகின்றார்.
இந்நாடுகள் போரிற்கு பிற்பட்ட சூழ்நிலையில் உள்ளுரில் நிறுவப்பட்ட உண்மைகாண் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் மூலம் அனைத்துலக சமூகத்தினதும் ஐ.நாவினதும் உதவியைப் பெற்று தம்மை மீள்கட்டமைப்புச் செய்தமையானது போரின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு முன்மாதிரியான ஒருசெயற்பாடாக அமைந்துள்ளது.
இச்செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு ஐ.நாவும் அனைத்துலக குழுமங்களும் முக்கிய பங்களிப்பை அளிக்கலாம், எனினும் நாட்டுக்குரிய அரசமைப்பே இதற்குரிய அடிப்படையான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு போர்க்காலத்தில் துன்புற்றவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கிறிஸ்டியன் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இச்செயற்பாடுகள் இடம்பெறாத வரையில் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் தமது பாதிப்புத் தொடர்பாக முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களைப் பெறுவதோ, முறையீடு செய்வதற்குரிய மனநிலையைப் பெறுவதோ, தங்களுக்குக் கொடுக்கப்படும் பதிலீடுகளைப் பெற்று பயன் பெறுவதோ பெரும்பாலும் நிகழ்வது அரிதாகவே காணப்படுகின்றது.
கமிலா சமரசிங்க (Gameela Samarasinghe -2013) அவர்கள் இலங்கையில் உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையிலான நல்லிணக்க ஆணைக்குழுவினால் (LLRC) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளீடு பற்றி விளக்கும் போது, “மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய துன்பங்களும் அவற்றினால் உருவாகிய மனவடுக்களும் இருக்கின்றன என்பதை இவ்வாணைக்குழு ஏற்றுக்கொள்கின்றது” என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாணைக்குழுவானது (LLRC) பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களையும் அதனால் அவர்கள் எதிர்நோக்கி உள்ள மனவடுவினையும் கவனத்தில் எடுத்து அவர்களுக்கு உளவளத்துணை வழங்கல், நீதி வழங்கல் ஆகிய பொறிமுறைகளை உருவாக்குதல், நஷ்டஈடு கொடுத்தல் போன்ற விடயங்களைச் செயற்படுத்துமாறு முன்மொழிந்துள்ளது.
இனங்களுக்கு இடையே மனஒருங்கிணைப்பும் சமாதானமும் நடைமுறைக்கு வர வேண்டுமாயின் அதனைச் சட்டங்களிலும் அரசமைப்புகளிலும் பொருத்தமான மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் தான் செயற்படுத்த முடியுமென வெளிப்படுத்தியுள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் உள்ள அனைத்து அமெரிக்க மனித உரிமைகள் நீதிமன்றம் (Inter-American Court of Human Rights) துன்பப்பட்ட சமூகங்களுக்கு வழங்க வேண்டிய நன்மைகள் பற்றி மிக விரிவான விளக்கங்களை வெளியிட்டுள்ளது. அவற்றுள் அந்நீதிமன்றம் பண்பாட்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பண்பாட்டு அம்சம் எனும் போது இறப்பு சார்ந்த கிரியைகள், சடங்குகள் போன்றவற்றை நினைவுகூருதல் போன்றவை உள்ளடங்கும். இதுபோலவே ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் European Court of Human Rights) மனித உரிமைகள் பெரியளவில் நசுக்கப்பட்ட போது நிகழ்ந்தவற்றைக் கணிப்பில் எடுத்து நீதி வழங்க உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வடமாகாணத்தில் போரால் நலிவுற்ற பிரதேசங்களில் சில பொருளாதார உள்கட்டமைப்பு அபிவிருத்திகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவை பெருமளவிற்கு மேலெழுந்த வாரியான விருத்தியேயாகும் என்கின்றார் சர்வானந்தன் (Sarvananthan 2012). மேலும் இவை துன்புற்றோரின் உளசமூக நன்னிலைப்பாட்டை உருவாக்குவதற்கும் உதவவில்லை.
போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நஷ்டஈடோ, சமூக மீளாக்கமோ, தேசிய ஒருமைப்பாடோ இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்ற நிலையே காணப்படுகின்றது. சமூகம் அபிவிருத்தித் திட்டங்களால் முழுமையாகப் பயன் பெற வேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்தி மட்டும் போதாது.
அதற்குச் சமூகம் தனது தனித்துவமான பெறுமானங்களையும் விழுமியங்களையும் மீள்கட்டமைப்புச் செய்துகொள்ளும் நிலையை அடைய வேண்டும் என வீரக்கொடி மற்றும் பெர்ணான்டோ (Weerackody and Fernando ) போன்றவர்கள் 2011ல் சுட்டிக்காட்டியமை இங்கு கவனிக்கத்தக்கது.
அனைத்துலகச் சட்டம், ஆயுதப் போராட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சிதைக்கப்பட்ட வாழ்வியற் கோலங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு உரிமை உடையவர்கள் என்பதை வலியுறுத்துகின்றது. இதில் உளசமூக அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புனர்வாழ்வு என்பது இன்றியமையாத ஒரு பொறிமுறையாக அமையும்.
ஐ.நா, பாதிக்கப்பட்டோருக்கு பரிகாரமாகவும் பதிலீட்டு உரிமையாகவும் இழந்தவற்றை மீள வழங்குதல், நஷ்டஈடு கொடுத்தல், மீளக் குடியேற்றல், திருப்தியை உருவாக்குதல், நடந்தவை போன்ற கொடூரமான சம்பவங்கள் மீண்டும் நிகழாது என நிச்சயமான உறுதியை அளித்தல் என்ற ஐந்து கொள்கைகளை வகுத்துள்ளது. இவற்றைத் தனிமனித, குடும்ப, சமூக மட்டங்களில் செயற்படுத்துவது சிறந்த பயனைத் தரும்.
உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை ஏற்றுக் கொள்வதில் கணிக்கத்தக்க அளவு முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன, குறிப்பாக ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமைச் சட்டத்திலும், மனிதாபிமானச் சட்டத்திலும், குற்றவியல் சட்டத்திலும் இவை தொடர்பான உடன்படிக்கைகள் இலங்கை உட்படப் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன் இவை அந்நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களிலும் இடம்பெற்றுள்ளன.
மனித உரிமைகளை ஸ்திரமாக நிறுவிய பின், அவற்றை மீறும் போது ஏற்படும் விளைவுகளை விளங்கி, அங்கீகரித்து, அதற்கான பதிலீடுகளை, பரிகாரங்களைச் செய்ய வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அம்மீறலால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளுக்கு பதிலீடு கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் உரோமாபுரிச் சட்டம்,குறிப்பாக, 75ஆம் 76ஆம் சரத்துக்களில் [The Rome Stature of the International Criminal Court (ICC), notably Articles 75 and 79 (ICC, 1998) வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகளை மீறியவர் யாராக இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதிலீடு வழங்குவது அந்நாட்டிலுள்ள அரசமைப்பின் பொறுப்பு என்ற கருத்து நிலை படிப்படியாக வலுப்பெற்று வருகின்றது.
புனர்வாழ்வு பெறுவதற்கான உரிமை, சிறுவர் உரிமை உடன்படிக்கையிலும், சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கையிலும், மாற்று வலுவுடையோர் உரிமைகள் உடன்படிக்கையிலும், சித்திரவதை செய்தல், குரூரமான, மனிதாபிமானம் அற்ற முறையில் தரக்குறைவாக நடத்துதலும் தண்டித்தலும் என்பவற்றுக்கு எதிரான உடன்படிக்கையிலும் விசேடமாகக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடூர சித்திரவதைக்கு எதிரான அமைப்பின் மூன்றாவது சரத்தானது பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதிலீடு கொடுக்கும் பொறுப்பும் கடமையும் நாட்டுக்குரிய அரசமைப்பைச் சார்ந்ததென்றும், அதேநேரத்தில் பதிலீட்டைக் கேட்டுப் பெறுவதற்குப் பாதிக்கப்பட்டவர்கள் உரித்துடையவர்கள் என்றும், இதன் மூலம் நியாயமானதும், கணிசமானதுமான, நஷ்டஈட்டை, உளசமூக அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புனர்வாழ்வை மக்கள் பெறமுடியும் என்றும் குறிப்பிடுகின்றது.
ஆயினும் இவற்றை நடைமுறைப்படுத்துதல் என்பது பெரிய சவாலாக உள்ளது. வளம் குறைந்த நாடுகளில்;, உளசமூக அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புனர்வாழ்வுச் செயற்பாட்டைச் சமூகமட்ட அணுகுமுறையினூடாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இதனைச் சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் முயற்சியில் செலவு குறைந்த, அதிக பயனுள்ள சிகிச்சையாகச் சமூகம்சார் அணுகுமுறையே பொருத்தமானதாக அமையும். போருக்குப் பின்னர் காணப்படும் பரந்த சமூக அளவிலான கூட்டு மனவடுவும் அரசின் நீதிசார், நிதிசார் தடைகளும் இவ்வாறான சமூக அணுகு முறையைக் கைக்கொள்வதனையே வேண்டி நிற்கின்றன.
கடுமையான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தகுதியான பதிலீட்டைப் பெறாத பட்சத்தில், கௌரவத்தை இழத்தல், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுதல், குற்றம் உள்ளோர் என நினைத்துத்தாமே ஒதுங்கிக் கொள்;ளுதல் முதலியவற்றால் தொடர்ந்து பாதிப்புறுவர்.
இத்தகையவர்களுக்குத் தொடர்ந்து சமூகத்தில் பிறருடன் சமமாகப் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். உள சமூக அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புனர்வாழ்வு ஒரு காத்திரமான உரிமை என வற்புறுத்துகிறார்.
Social Buttons