யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடியது அநீதியான செயற்பாடாகும். விடுதலைப்புலிகள் அமைப்பை முதன்மைப்படுத்தாது தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்கள் எனக் கூறும் உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது என்று அரசின் பங்காளிக்கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநராக மீண்டும் படைத்தரப்பைச் சார்ந்தவரை நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை எதிர்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மூடப்பட்டது அநீதியான செயற்பாடாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே அவ்வாறான அமைப்பின் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது சட்ட விரோதமாகும்.
இதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடுவது பதிலாக அமையாது. விடுதலைப் புலிகளை பல்கலைக்கழகத்தில் நினைவு கூருவதை தடை செய்து உத்தரவு பிறப்பித்திருக்கலாம். அதைவிடுத்து பல்கலைக்கழகத்தை மூடியது அநீதியாகும்.
இதேவேளை, இராணுவ மற்றும் பொலிஸ் பேச்சாளர்கள் யுத்தத்தில் இறந்த உறவுகளை நினைவு கூர்ந்து மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென்றும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூருவதையே தடை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
என்னைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளை முதன்மைப்படுத்தாது தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்தவர்கள் என தீர்மானம் எடுக்கும் உரிமை அதனை வெளிப்படுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது. இதற்கு தடை போட முடியாது.
வட மாகாண சபை ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியே தற்போது பதவி வகிக்கின்றார். இதனோடு எமக்கு உடன்பாடு கிடையாது. எனவே புதிதாக வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள வரும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்தவர் ஒருவர் எனத் தெரிய வந்துள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, சிவிலியன் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.
ஆளுநர் நியமன விடயம் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டோடு ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.
வட மாகாண சபை செயலாளர் பொலிஸ் அத்தியட்சர் போன்றோர் நியமிக்கப்படும் போது மாகாண முதலமைச்சரோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டோடு இப் பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என்றே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளன.
ஆனால் மத்திய அரசாங்கமோ இதனை பின்பற்றுவதில்லை. இது கவலைக்குரிய விடயமாகும்.
எதிர்க்கட்சிகள் இன்று ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு வேட்பாளர் எவருமின்றி குழம்பிப் போயுள்ளன. அந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நிலையிலேயே பொது வேட்பாளரைத் தேடுகின்றனர். பொது வேட்பாளராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட வேண்டுமென்ற கருத்துகள் கோமாளித் தனமானவை என்றார்.
Social Buttons