கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில வீடுகளை இலக்கு வைத்து இலங்கை இராணுவத்தினர் சுற்றிவளைத்து, திடீர் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று ஞாயிறு அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
இன்று விடிந்தும் விடியாமலுமாக அதிகாலை வேளையிலேயே கிளிநொச்சி இரத்தினபுரத்தில் உள்ள சில வீடுகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.
வீடுகளுக்குள் உறங்கிய மக்கள் கதவைத் திறந்தபோது இராணுவத்தினர் காணிகளுக்குள் நின்றனர். வீதிகள் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டிருந்தன. ஆட்களை கைது செய்யும் இராணுவ வாகனங்களும் கொண்டுவரப்பட்டிருந்தன.இதன்போது சில தமிழ் தலையாட்டிகளும் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு மணிநேரம் அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் அதிகாலையிலேயே பதற்றம் நிலவியது. வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தியதுடன், குடும்ப விபரங்களையும் இராணுவத்தினர் பதிவு செய்து கொண்டனர்.
கோபி உள்ளிட்ட மூன்றுபேரை சுட்டுக் கொன்றதாக அரசாங்கம் அறிவித்த பின்னர், குறித்த பகுதியில் நடக்கும் இரண்டாவது அதிரடித் தேடுதல் நடவடிக்கை இதுவாகும்
Social Buttons