தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மாலை 3 மணியளவில் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. பல தொகுதிகளில் வாக்குப் பதிவு 55 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் தொகுதியில் 58.47 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக மத்திய சென்னைத் தொகுதியில் 35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் வேலூர், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் ஐம்பது சதவீதத்திற்கு அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இடைத் தேர்தல் நடக்கும் ஆலந்தூர் தொகுதியில், 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. தலைவர் வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர். புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.
2009ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவீத வாக்குகளும் 2011ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 78.29 சதவீத வாக்குகலும் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
Social Buttons