Latest News

April 17, 2014

விவசாயிகளிடமுள்ள பாரம்பரிய அறிவு பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு சளைத்தது அல்ல! – அமைச்சர் ஐங்கரநேசன்
by admin - 0

விவசாயிகளிடம் அனுபவ அறிவும் தலைமுறை தலைமுறையாகத் திரண்டு வந்த பாரம்பரிய அறிவும் உள்ளது. இவர்களின் இந்த அறிவு, பல்கலைக்கழக ஆய்வாளர்களின் அறிவைவிட குறைந்தது இல்லை என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இன்று யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மண்டபத்தில் விவசாயிகளுடனான தொடர்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொழும்பு பல்கலைக்கழக விவசாய தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானக் கற்கைகள் நிறுவனமும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடமும், வடமாகாண விவசாய அமைச்சும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து அறிமுக உரையை நிகழ்த்தியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  
அமைச்சர் மேலும் அங்கு உரையாற்றுகையில், ஆராய்ச்சியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தொடர்பாடல் இன்றியமையாதது. இந்தத் தொடர்பாடல் வெறுமனே ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்குத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துவிட்டுப் போகும் ஒருவழித் தொடர்பாடலாக இருந்துவிட முடியாது. அப்படி இருக்கக் கூடாது. இது, ஆய்வாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இருவழித் தொடர்பாடலாக இருப்பது அவசியம்.
ஏனெனில் ஆய்வாளர்கள், விவசாயிகள் என்று இரண்டு தரப்பினர்களிலும் ஒரு தரப்பினரின் அறிவு மற்றைய தரப்பினரின் அறிவைவிடக் குறைந்தது இல்லை. நமது பரம்பரை விவசாயிகள் அறிவுமிக்கவர்கள். காலங்காலமாக அவர்கள் பயிர் செய்துவரும் தோட்டநிலம் அல்லது வயல் அவர்களுக்கு ஒரு களப் பரிசோதனைச்சாலை, அங்கு அவர்கள் பெற்றுக் கொண்ட அனுபவ அறிவின் மூலமும், அவர்களின் மூதாதையர்களிடம் இருந்து தலைமுறை தலைமுறையாகத் திரட்டிய அறிவின் மூலமும் விவசாயிகளிடம் விவசாயம் பற்றிய போதிய ஞானம் இருக்கிறது.

நமது விவசாயிகளுக்கு எந்தப் பயிரை எந்த நிலத்தில், எந்தக் காலத்தில் நடவேண்டும் என்று தெரியும். எந்தப் பயிரை ஊடுபயிராக வளர்த்தால் பீடைகளைக் கட்டுப்படுத்தலாம் என்று தெரியும். கிழக்கில் இருந்து மேற்காக மின்னல் வெட்டினால் ஒரு மணித்தியாலத்திற்குள் மழை பெய்யும் என்று தெரியும். சந்திரனைச் சுற்றி சிறு வளையம் தோன்றினால் அடுத்த இரண்டு நாட்களில் இலேசான மழை வரும் என்று தெரியும். கிணற்றுக்குள் இருக்கும் தவளைகள் தொடர்ச்சியாக ஒலி எழுப்பினால், நீர்ப்பாசனத்துக்கு ஆயத்தம் செய்யவேண்டும் என்று தெரியும். சுதேசிய மருத்துவ அறிவைப் பயன்படுத்தியே ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதைப் போன்றே, விவசாயிகளின் சுதேசிய அறிவை ஆதாரமாகக் கொண்டுதான் விவசாய விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். இதனால்தான் இரண்டு தரப்பினரது அறிவையும் ஒப்பிட்டு எவருடையது கூட அல்லது குறைய என்று சொல்ல முடியாது என்று குறிப்பிட்டேன்.

அப்படி ஒப்பிட முடியும் என்று யாராவது சொன்னால், சில விடயங்களில் ஆராய்ச்சியாளர்களின் ஒருசில வருட ஆய்வு அறிவைவிட விவசாயிகளின் பன்னெடுங்காலப் பட்டறிவு மேலானது என்றுதான் நான் சொல்லுவேன். ஆனால், விவசாயிகளும் ஆராய்ச்சியாளர்களும் தங்கள் அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்வதற்கு இரண்டு தரப்பினரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுவது அவசியம். பழையன கழிதலும் புதியன புகுதலும் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாதது. கால மாற்றங்களுக்கு ஒவ்வாத பழைய விவசாய முறைகளுக்கு மாற்றாகச் சர்வதேச அளவில் அறிமுகமாகும் விவசாய முறைகளை, புதிய தொழில் நுட்பங்களை நமது விவசாயிகள் ஆய்வாளர்களிடம் இருந்து தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.


பயிர்களில் புதிதாகத் தோன்றுகின்ற நோய்கள் பற்றியும் பீடைகள் பற்றியும் வயல் வெளிகளையே வாழ்வாகக் கொண்ட விவசாயிகளுக்கே முதலில் தெரிய வருகிறது. இந்தத் தகவல்களைப் பெற ஆய்வாளர்கள் விவசாயிகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், பல்கலைக்கழக ஆய்வாளர்களும் விவசாயிகளும் பரஸ்பரம் ஒருவரது அறிவை மற்றவர் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு தொடர்பாடலில் ஈடுபட வேண்டும். அறிவை ஜனநாயக மயப்படுத்தும் இந்த இருவழித் தொடர்பாடல் எப்போதாவது ஒருநாள் என்றில்லாமல் அவ்வப்போது தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். எமது விவசாயப் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பெறுவதற்கு இது அவசியமாகும் என்று தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி கலாநிதி திருமதி சி.சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவி திருமதி ஷானிக்கா ஹிரும்புரேகம, யாழ் பல்கலைக்கழக விவசாயபீடப் பேராசிரியர் கு.மிகுந்தன், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் அதிக எண்ணிக்கையான விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
« PREV
NEXT »