கொலை மற்றும் திட்டமிட்டு பொலிஸாரை அச்சுறுத்தியமை தொடர்பில் கைதான ஒன்பது மாத ஆண் குழந்தை ஒன்றுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் மீது திட்டமிட்டு கற்களால் தாக்குதல் நடத்தியமை தொடர்பில், மொஹமட் மோசா கான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 30 பேருக்கு எதிராக லாஹூர் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
சுற்றிவளைப்பில் ஈடபட்ட பொலிஸார் மீது குறித்த சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களில் ஒன்பது மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்குகிறது.
தாக்குதல் நடத்தியபோது குழந்தையின் கையில் கல் இருந்தமையால் குழந்தையும் சந்தேகநபராக கருதப்பட்டு கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தையின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதற்காக அவரது தாத்தா, குழந்தையை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது குழந்தையின் கையில் பால் போத்தல் இருந்தமை வேடிக்கையாக இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீதிபதி குறித்த குழந்தை தொடர்பில் விரைவான விசாரணைகளை நடத்தி பிணை வழங்கியதோடு, ஏப்ரல் 12ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
குழந்தையின் தாத்தா கருத்து வெளியிடுகையில், தனது பேரனுக்கு தனது பால் போத்தலைக் கூட சரியாக பிடிக்கத் தெரியாது எனவும், அப்படியிருக்க எப்படி பொலிஸார் மீது கல்லெறிய முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Social Buttons