Latest News

March 14, 2014

விவசாய நிலங்களை விட்டு இராணுவம் வெளியேறினால் மட்டுமே வடக்கில் விவசாயம் முழுமைபெறும்; கனடா குழுவிற்கு விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டு
by admin - 0

வடக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் மற்றும் விவசாய திணைக்களங்களின் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் இராணுவம் வெளியேறினால் மட்டுமே வடக்கில் விவசாயம் முழுவடிவம் பெறும் என கனடா குழுவிற்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு நாள் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கனடா தூதரக குழுவினர் விவசாய அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சரை இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து விவசாயத்தின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொண்டார். அதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்  தெரிவிக்கையில், வடக்கின் பல்வேறு இடங்களில் எமது விவசாய நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாய நடவடிக்கைகளை முழுமையான முறையில் நடைபெறவில்லை. அதன்படி வலி.வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையிலும் உல்லாச விடுதிகள், பாற்சாலைகள் அமைத்து வியாபாரம் செய்தல் மற்றும் மரக்கறி வியாபாரம் போன்றவற்றிலும் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. எனவே இராணுவம் விவசாய நிலப்பரப்புக்களில் இருந்து முற்றுமுழுதாக விலகிக் கொண்டால் மட்டுமே விவசாயத்தில் வடக்கு தன்னிறைவைக் கொண்டுவரும் என்றேன். மேலும் விவசாயத்தில் நவீனதொழில் நுட்ப முறைகளைப் பயன்படுத்தி விவசாயத்தினை வடக்கில் மேற்கொள்ள அதற்கான உபகரணம் மற்றும் பயிற்சிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தேன் . அத்துடன் தென்னிலங்கையில் இருந்து வரும்  பால் கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைந்த விலையில் பாலினைக் கொள்வனவு செய்து வருகின்றனர். அதில் இருந்து கிடைக்கும் வருமானமும் தென்னிலங்கைக்கு தான் செல்கிறது இதனால் வடக்கில் பால் விற்பனை செய்பவர்கள் மிகவும் நஷ்டத்தையே எதிர்கொள்கின்றனர். எனவே வடக்கில் பால் கொள்வனவு செய்யும் வசதிகள், தொழிற்சாலைகளையும் உருவாக்கி அதனூடாக பாலில் இருந்து பெறக்கூடிய ஏனைய பொருட்களையும் செய்வதற்கான உதவிகளை வழங்குமாறும் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். முடிந்தளவு முயற்சிகளை மேற்கொள்வதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர் என்றார். -



« PREV
NEXT »

No comments