இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்களே செய்து கொண்ட பிழை தான் ஜெனீவா. இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
18ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு பரிந்துரையாகும். இலங்கை அரசாங்கம் ஐ.நா.பிரதிநிதிகளை வரவழைப்பதற்காகவே கதவுகளை திறந்துவிட்டுள்ளது. அரசாங்கம் எத்தகைய நடைமுறைகளை பின்பற்றினாலும் நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன் எனவும் அவர் குறிப்பிடடார்.
அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை. இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது. சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுநரை வெளியேற்ற வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமென்பதே வடமாகாண சபையின் கோரிக்கை. உண்மையில் ஆளுநரை தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும். கிறீஸ் போன்ற நாடுகளில் ஆளுநர் ஒருவரை தெரிவுசெய்வதில் பல நடைமுறைகள் இருப்பதை நான் அவதானித்தேன் எனவும் தெரிவித்தார்.
நிர்வாக சேவையில் 15 வருடங்கள் அனுபவமும் பரீட்சைகளில் சித்தியடைந்த பின்னருமே ஒருவரை ஆளுநராக அங்கு தெரிவுசெய்வார்கள். ஆனால்இ இங்கு அவ்வாறு இல்லை. இதனால் சிவில் சமூகத்திற்கு பிரச்சினை எழுகின்றது என்றார்.
அதேபோல வடமாகாண சபை கூறும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி வழங்கினாலும்இ மாவட்ட ஆட்சிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பட்டார்.
No comments
Post a Comment