இலங்கை அரசாங்கம் பூண்டோடு தமிழ் மக்களை கொலை செய்தே போரில் வெற்றி பெற்றது என்பதை சர்வதேச விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து மாகாண சபையில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பூண்டோடு அழிப்பு என்ற வார்த்தையை இப்படியான விடயத்திற்கு பயன்படுத்தக் கூடாது என முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த வார்த்தை சட்ட ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் அதற்கு பதிலாக இணையான வேறு வார்த்தையை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
என்ன நடந்தது என்பதை சர்வதேச விசாணை ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்தாத வரை, அப்படியான வார்த்தையை பயன்படுத்துவது பொருத்தமற்றது எனவும் முதலமைச்சர் கூறினார்.
அதேவேளை மன்னார் திருகேதீஸ்வரம் மனித புதைக்குழி தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுசரனையோடு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிரேரணையை முன்வைத்தார்.
சிவாஜிலிங்கம் முன் வைத்த பிரேரணை, அனந்தி சசிதரன் முன் வைத்த பிரேரணை மற்றும் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் இறந்த இடத்தில் நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை உள்ளிட்ட யோசனைகள் இன்று சபையில் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன் மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட 14 சட்டமூலங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment