உயிரிழந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் குடும்பத்தினர் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக சட்டத்துறை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்திற்கு இடமான முறையில் திடீரென உயிரிழந்த நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெற்றதுடன், அவரது இறப்புக்கு பின்னால் இருப்பது யார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆற்றப்படவிருந்த அஞ்சலி உரையை நிறுத்துமாறு ராஜபக்ஷ அரசாங்கம் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இறுதிக் கிரியையின் போது அஞ்சலி உரையாற்றவிருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் சிசிர ஆப்ரூ உள்ளிட்டோரை உரையாற்ற வேண்டாம் என ஸ்ரீ ஸ்கந்தராஜாவின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.
இலங்கையின் முக்கிய பிரமுகர்களின் குடும்பத்தினர் அல்லாத சாதாரண குடும்பத்தினரான நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜாவின் குடும்பத்தினர் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் காரணமாக அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு சட்டவிரோதமானது என தீர்ப்பளித்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான ஸ்ரீஸ்கந்தராஜா, ராஜபக்ஷ அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வந்தார்.
ராஜபக்ஷவினரின் எதிர்ப்பு இறுதியில் அவரது மர்மமான உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டது.
தனது துக்கத்தை பகிர்ந்து கொள்ள எவரும் இல்லை என ஸ்ரீஸ்கந்தராஜா உயிரிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் முக்கிய நபர் ஒருவரிடம் கூறியதாக பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் கூறியுள்ளார்.
அரச சேவையில் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் சுகவீனமடையும் போது அவர்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கான பணம் ஜனாதிபதி நிதியத்தின் மூலமே வழங்கப்படும். எனினும் நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு ஜனாதிபதி நிதியம் அந்த செலவுக்கான பணத்தை வழங்கவில்லை என தெரியவருகிறது.
No comments
Post a Comment