Latest News

November 11, 2013

ஆளுநரின் உரையினை புறக்கணித்த சிவாஜிலிங்கம், அனந்தி , சுகிர்தன்
by admin - 0

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கன்னியுரையினை வடமாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போது வடமாகாண ஆளுநரின் கன்னியுரை இடம்பெற்றது. இதனை, தழிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் உரையினைப் புறக்கணிக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் உரையினை பகிஸ்கரித்து விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் மூவரும் விருந்தினர் அறையினுள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அங்கு கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன் தான் ஏற்கனவே கூறியவாறு சந்திரசிறி  ஒரு போர்க்குற்றவாளி.அவர் யாழ்ப்பாணத்தினில் இராணுவத்தளபதியாகவிருந்த வேளையினிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.அதற்கு பதிலளிக்க வேண்டியவர்.அது தவிர இவரை இணைப்பாளராக நியமித்த வேளையினிலேயே வவுனியா தடுப்பு முகாம்களினிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர்.நடந்து முடிந்த தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.மற்றொரு அங்கத்தவரான சுகிர்தன் கருத்து தெரிவிக்கையினில் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தே தாம் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.வெளிநடப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த கே.சிவாஜிலிங்கம் தமது எதிர்ப்பு ஒட்டு மொத்த தமிழ் மக்களதும் எதிர்ப்பாகுமென தெரிவித்தார்.யுத்த அவலங்களை தாண்டி நிற்கும் ஒரு பெண்ணான அனந்திக்கு இருக்கும் முதுகெலும்பு தேர்தல் காலங்கிளனில் ஆளுநரை திட்டிக்கொண்டிருந்த தனது சகபாடிகள் பலரிற்கு இல்லாமல் போய்விட்டதென தெரிவித்தார்.வெளிநடப்பு பற்றி கருத்து வெளியிட்ட மற்றொரு உறுப்பினரான பரஞ்சோதி கட்சி மட்டத்தினில் இந்தவிடயத்தை கொண்டுசென்று ஆதரவை திரட்டியிருக்கவேண்டுமென  தெரிவித்தார்.எனினும் இது வரை தெரிவு செய்யப்பட்ட 30 அங்கத்தவர்களையும் ஒன்று கூட்டடி கட்சி தலைமை பேச இதுவரை தலைமை தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

முதுகெலும்பு உள்ள உறுப்பினர்கள் கூட்டமைப்பில் இவர்கள் மட்டுமா? மற்றவர்கள் ஏன் வெளிநடப்பு செய்யவில்லை என மக்கள் ஆதங்க படுவது மற்றவர்கள்  விளங்கிக்கொள்ள வேண்டும் 

« PREV
NEXT »

No comments