Latest News

October 01, 2013

இந்திய அரசைப் போலவே இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதாக வைகோ சாடியுள்ளார்!
by Unknown - 0

சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க தவறிய இந்திய அரசைப் போலவே இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக மீனவர்கள் 1984ம் ஆண்டு முதல் சிங்களப் பேரினவாத இராணுவத்தால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

கடந்த 10.11.1984 அன்று இராமேஸ்வரம் மீனவர் முனியசாமி தொடங்கி, இதுவரை 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ஊனமாக்கப்பட்டு அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் முற்றிலும் திட்டமிட்டு சேதமாக்கப்பட்டு, பிழைக்க வழியின்றி முடமாக்கப்பட்டுள்ளனர்.

வருவாய் ஈட்டும் ஆதாரங்களை அழித்து அவர்களை செயலற்றவர்களாக்கி விட்டது சிங்கள இராணுவம்.
தங்களுக்கு ஆண்டாண்டு காலமாக வாழ்வளிக்கும் பாரம்பரியத் தொழிலை விட்டுவிட்டு சாண் வயிற்றுப் பிழைப்பிற்காக கபடமற்ற மீனவ மக்கள் படுகின்ற துயரமும், தொழிலில் ஈடுபடும்போது சிங்கள இராணுவத்தால் அவர்கள் படும் அச்சுறுத்தலும் தாங்க முடியாத வேதனையைத் தருகிறது.

இத்தகைய கொடுமைகளுக்கு மத்தியில் தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க, கடந்த 26.08.2013 புதன்கிழமை அன்று, இராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்கள் நான்கு படகுகளில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, சிங்கள இராணுவத்தால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.
ஒரே நீண்ட சங்கிலியால் அந்த 35 மீனவர்களும் பிணைக்கப்பட்டு, விலங்கினும் கீழாக நடத்தப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களைக் காணாது பதறும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீருக்கும், பிள்ளைகளின் பரிதவிப்புக்கும் எவரால் ஆறுதல் சொல்ல இயலும்?

இந்த நிலையில், கடந்த 23.09.2013 திங்கட்கிழமை அன்று புத்தளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அம்மீனவர்கள் இன்று வரை தாயகம் திரும்பவில்லை.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், கொழும்பு போக்குவரத்து காவலர் குடியிருப்புப் பகுதியில் ஓர் அறையில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் நான்கு விசைப்படகுகளையும், மீன்பிடி வலைகளையும் இன்னமும் நீதிமன்றப் பொறுப்பிலேயே வைத்துள்ளனர்.

சொந்த நாட்டு மக்களைப் பாதுகாத்து அவர்களின் உடைமைகளை முறையாகப் பாதுகாத்து தாய்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமையில் இருந்து தவறியது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம்.

இந்திய அரசைப் போலவே அதுவும் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறது.

சுண்டைக்காய் நாடான இலங்கை, தமிழக மீனவர்களைத் தாக்குவதையும், கைது செய்வதையும், சிறையில் பூட்டுவதையும் அவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவதையும் கண்டிக்கும் யோக்கியதையோ, விரட்டி அடிக்கும் துணிச்சலோ, எந்த நாட்டை எங்கள் சொந்த நாடென்று நினைக்கிறோமோ அந்த இந்திய நாட்டிடம் இல்லை என்பதைச் சொல்வதற்கே அவமானமாக இருக்கிறது.

இந்த நிலை மாறிட, இந்திய அரசு விரைந்து செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 35 பேரையும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பில் கொண்டுவந்து, உடனடியாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கவும், அவர்களின் விசைப்படகுகளையும், மீன்பிடி வலைகளையும் நீதிமன்றப் பொறுப்பில் இருந்து பத்திரமாக மீட்டு, அவர்களிடம் ஒப்படைக்க விரைந்து முயற்சி மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

தமிழக மீனவர்கள் மீதான இத்தாக்குதலை இலங்கை அரசு தொடரும் பட்சத்தில் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்து, தூதரக உறவைத் துண்டித்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டுமெனவும் இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments