Latest News

September 15, 2013

ஈழத் தமிழர் விடிவுக்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு - மதிமுக தீர்மானம்
by admin - 0


 ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு தமிழ் ஈழமே தீர்வாகும் என்று மதிமுகவின் விருதுநகர் மாநாட்டில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.. ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு ஆகும் என்று, 1995ஜூலை 1 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க.வின் மாநில மாநாடு, தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றியது. அதே நிலையில், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ஈழ விடுதலைக்காகப் போராடுகிறது.

முள்ளிவாய்க்கால் கோரப்படுகொலைகளுக்கு பின்னர், தமிழர் தாயகப் பகுதிகளில், சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. சிங்கள இராணுவமும், போலீசும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன. அவர்களையும், சிங்களக் குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, ஒரு பொது வாக்கெடுப்பை, அனைத்து உலக நாடுகளும், ஜ.நா. மன்றமும் நடத்த வேண்டும் என்றும், அந்தப் பொது வாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் ஏதிலிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே, அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வகை செய்ய வேண்டும் என்றும், 2011 ஆம் ஆண்டு, ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஜரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற மாநாட்டில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதன்முதலில் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கருத்து, உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த, ராஜபக்சே கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம், சுதந்திரத் தமிழ் ஈழத்தை அமைப்பதையும், ஒரே இலக்காகக் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்; தமிழகத்திலும் தரணி எங்கிலும் இதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற பணியில், தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என இம்மாநாடு தீர்மானிக்கின்றது என்று கூறப்பட்டிருந்தது. மாநாட்டில் இடம் பெற்ற இன்னொரு தீர்மானம்... பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, உலகம் தடை செய்த குண்டுகளை விமானப் படை கொண்டு வீசியும், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத் தாக்குதல் நடத்தியும், கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள அரசை, அனைத்து உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற குரல் தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் மான உணர்வு உள்ள தமிழர்கள், மனித உரிமை காப்பாளர்கள் நெஞ்சில் ஓங்கி ஒலிக்கும் நிலையை மாற்றுவதற்காகவே, தமிழர்களின் புதைகுழியின் மீது, தமிழ்க்குலத்தின் மரண ஓலம் ஒலித்த இடத்தில், காமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17,18 தேதிகளில் கொடியவன் ராஜபக்சே தலைமையில் நடத்துவதற்கு இந்திய அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனை பெற வேண்டிய கொலைபாதகன் ராஜபக்சே, இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்புக்கே தலைவர் ஆகி விடுவான். நீதியை புதைகுழிக்கு அனுப்பவே இந்திய அரசும், சிங்கள அரசும் வஞ்சகமாகச் செயல்படுகின்றன. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி, இனக்கொலை செய்த குற்றவாளி இராஜபக்சேவை தப்பிக்க வைக்க, தொடர்ந்து துரோகம் இழைக்கும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு. சுமார் 25 லட்சம் பூர்வகுடி தமிழர்களை நாடற்றவர்களாக்கிய கொடுங்கோலன் இராஜபக்சே ஆட்சியாளனாக இருக்கின்ற இலங்கையில் நவம்பர் 2013 இல் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்தக் கூடாது என்றும்; ஈழத்தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்றும் காமன்வெல்த் அமைப்பை இம்மாநாடு வலியுறுத்துகிறது


« PREV
NEXT »

No comments