Latest News

September 25, 2013

ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்ட மாவீரர்தினம் – போராளிகளின் வேண்டுகோள்!
by admin - 0

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் விரும்பியோ விரும்பாமலோ மாவீரர்கள்தான் கண்கண்ட தெய்வங்கள். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தெய்வங்களின் சாம்பல் மேட்டில் நின்றுதான் குபேர வாழ்க்கை நடாத்தப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. இதைக் கூறுவது புண்படுத்துவதற்கல்ல மீள் நினைவுகளுக்காகவே. இதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அந்த மரணித்த மாவீர தெய்வங்களின் நினைவாக வருடா வருடம் நடாத்தப்படும் “மாவீரர் தினம்” கேளிக்கைகளுக்கான சம்பிரதாய சடங்கல்ல. ஒவ்வொருவரின் உணர்வோடும், உயிரோடும் பின்னிப்பிணைந்திருக்கும் ஒரு வணக்க தினம்.

இத்தினத்திலே எமக்கு நாமே எடுத்துக்கொள்ளும் உறுதி மொழி, ஈழத்தமிழரின் தலை நிமிர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டும் மொழியாகும். இதனால் இத்தினத்தில் எந்தளவு தூரம் பரிசுத்தமும், புனிதமும் பேணப்பட வேண்டும் என்பதில் எமக்குள் நாமே ஒரு கணக்குப் போட்டு வைத்திருத்தல் அவசியம்.

அந்த கணக்கின் வெளிப்பாடுதான் அனைத்து உலகத்திலிருக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வொரு தேசத்திலும் ஒரு மாவீரர் தினம் நடாத்தப்படவேண்டும் என்பது.
விடுதலைப்புலிகளால் சுட்டிக்காட்டப்பட்ட இந்த புனிதமான மாவீரர் தினத்தை அவரவர் தம் தேவைக்காக பங்குபோட்டு சிதறடிக்கக்கூடாது என்பதில் எமக்கு என்றும் உறுதியுண்டு. ஏனெனில் மாவீரர் தினம் ஒன்றால்த்தான் சிங்களத்திற்கு அதிர்வான செய்தியை தமிழ்மக்கள் சார்பில் விடுக்க முடியும் என்பதை உண்மையாக ஏற்றுக்கொள்கிறோம்.

சில காலங்களில் விளக்கமில்லாத சில குழப்பங்களால் இறுதியாக புலம்பெயர்ந்த போராளிகள் புறந்தள்ளப்பட்டதாகவும் அதனால் வெவ்வேறு மாவீரர் தினங்கள் அனுஸ்டிக்கப்பட வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டதையும் அறிந்திருப்பீர்கள்.
அதனால் மாவீரர் தியாகங்களை சிங்களம் தங்களுக்குச் சார்பாக மாற்றியமைக்க இன்றுவரை முயன்றாலும் மாவீரர்களின் உண்மையான தியாகங்களுக்கு முன்னால் சிங்களம் மட்டுமல்ல எவரின் தந்திரமும் வெறும் புஸ்வாணமே.

விடுதலைப்புலிகள் அமைப்பினால் முன்பிருந்தே அடையாளம் காட்டப்பட்ட கட்டமைப்பு அனைத்துலக செயலகம் என்பதை யாவரும் அறிவர்.  இதனடிப்படையில் மாவீரர் தினங்கள் உலக நாடெங்கிலும் உணர்வுபூர்வமாக இதுவரை காலமும் அனுஸ்டிக்கப்பட்டு வந்தது. இதற்குத்தான் அனைத்து தமிழ்மக்களும் அங்கீகாரம் வழங்கியிருந்தார்கள். இனிவரும் காலங்களிலும் அக்கட்டமைப்பினால் நடாத்தப்படும் மாவீரர் தினங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படகூடியதும் ஒழுங்கானதும் ஆகும்.

விடுதலைப்புலிகள் என்ற அமைப்பாலும் அதன் தலைவர் மேதகு வே. பிரபாகரனாலும் எமது போராளிகள் ஒழுக்கத்தோடும், கட்டுப்பாட்டுடனும், கீழ்ப்படிவுள்ளவர்களாகவும் வளர்த்தெடுக்கப்பட்டார்கள் என்பது உண்மையானால் உலகம் முழுவதிலும் அனைத்துலகச் செயலக கட்டமைப்பினால் மட்டுமே மாவீரர் தினம் நடாத்தப்பட முடியும். அதுவே கட்டுக்கோப்புடன் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பின் மாவீரர்களுக்கு நாம் வழங்கும் கெளரவமுமாகும்.

இறுதிக்களம் கண்டு பின் புலம்பெயர்ந்த போராளிகள் நம்பிக்கையின்றி ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தை வைத்து புதிய அமைப்புக்களை உருவாக்குவதோ அல்லது இயக்கத்தின் கட்டமைப்பு ஒன்றை புதிதாக மீளமைப்பதோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கோட்பாட்டையும், ஒழுக்கத்தையும் மீறும் செயலாகும். தற்போது அனைத்துலக கட்டமைப்பு வழிநடத்தப்படுவது இறுதியாக களத்தில் நின்று பின் புலம்பெயர்ந்து வந்த எமது இயக்கத்தின் போராளிகளினால் தான் என்பதை அனைத்துலக கட்டமைப்பினரும் ஏனைய போராளிகளும் நன்கு அறிவர்.

எவர் என்ன பிழை விடுகிறார்கள் என்பதை நன்கு அவதானித்துக்கொண்டிருக்கும்   தலைவர் மீண்டும் களத்திற்கு வரும்போது அவர்களுக்கான ஒழுங்காற்று நடவடிக்கைகளை தலைவர் நேரடியாக வழங்குவார். அதுவரை போராளிகள் நாம் எல்லோரும் தலைவரினால் அடையாளம் காட்டப்பட்ட அனைத்துலக கட்டமைப்புடன் சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுவோம் என உறுதி பூணுவோம்.

இந்த ஒழுங்கிற்கமைவாக நாம் செயற்படாது விடின் சிங்களத்துடன் இணைந்து எம் தேசத்து மக்களை மீண்டும் ஒரு அழிவுப் பாதைக்குள் இட்டு சிங்களத்தின் வெற்றிக்கு வழிசமைத்துக் கொடுக்கின்றோம் என்பதை மறுக்க முடியாது.
காலத்தின் தேவை கருதி எம்மின மக்களின் சுயநிர்ணய வாழ்வையும், மாவீரர்களின் குடும்ப உறவுகளையும், போரிலே விழுப்புண் அடைந்து முடங்கியிருக்கும் போராளிகளையும் கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து போராளிகளும், விடுதலைப்புலிகளின் அனைத்து கட்டமைப்புகளும், தமிழ் மக்களுக்கான அனைத்து பொது அமைப்புகளும் எதுவித பிரிவுமின்றி இணைந்து இனிவரும் மாவீரர் தினங்களை அனுஸ்டிக்க வேண்டுமென மிகவும் தாழ்மையுடன் மாவீரர்களின் கல்லறையின் மீது சத்தியம் செய்து கேட்டுக்கொள்கின்றோம்.

போராளிகள்
மதுரன்-புலனாய்வுத்துறை
செயல்வீரன்-புலனாய்வுத்துறை
பாண்டி-அரசியல்த்துறை
கருணா-அரசியல்த்துறை
தமிழின்பன்-அரசியல்த்துறை
புலிக்குட்டி-நீலன் படையணி
திருமலை-நீலன் படையணி
வெற்றிக்கரசு-இம்ரான் பாண்டியன் படையணி
நாவரசன்-சாள்ஸ் அன்ரனி படையணி
பார்த்தீபன்-நீலன் படையணி
கொள்கை-அரசியல்த்துறை-கடற்புலிகள்
அருந்தன்-புலனாய்வுத்துறை-கடற்புலிகள்
சுடரவள்-கணணிப்பிரிவு
அறிவு-கண்காணிப்புப்பிரிவு
திருமலர்-அரசியல்த்துறை
ஈழவள்-மாலதி படையணி
இந்து-மாலதி படையணி
poraalikal@gmail.com
குறிப்பு: மேற்படி வேண்டுகோள் சுயமாக எமது போராளிகளால் அறிக்கையிடப்படுகின்றது. இதற்கு இலங்கை அரசோ, மாற்று சக்திகளோ அல்லது வேறு எவரோ பின்புலமாக நின்று ஊக்குவிக்கின்றார்கள் என தவறாக கற்பிதம் கொண்டு உதாசீனம் செய்ய வேண்டாம் என பாசத்துடன் கேட்டுக்கொள்கின்றோம்.
« PREV
NEXT »

No comments