Latest News

September 23, 2013

தமிழினத்தை அழித்த இனவெறி அரசுக்கு வடக்கு மக்கள் கொடுத்த பதிலடியே வடக்கு தேர்தல்; நாம் தமிழர் கட்சி தெரிவிப்பு
by admin - 0


வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியானது தமிழினத்தை இன அழித்த சிங்கள பெளத்த இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின்  ஐந்து மாவட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியினையடுத்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, உலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாவே இலங்கை அரசால் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தமிழ்த் தேசியகூட்டமைப்பிற்கு ஈழத் தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை அழித்த சிங்கள பெளத்த இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும். இராணுவத்தை பயன்படுத்தி தமிழர்களை வாக்குச் சாவடிக்கு வர விடாமல் அச்சுறுத்தல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்ச அரசு செய்த முயற்சியை விடுத்து துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வட மாகாண தமிழ் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை, இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு தாங்கள் வாழவும், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு தீர்வையே அவர்கள் விரும்புவதை வெளிப்படுத்துவதாக கூறினால், அதை விட கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் அங்கு நடந்த தமிழின அழிப்புப் போரில் தங்கள் கணவன்மாரை இழந்த 50 ஆயிரம் பெண்கள், போரிலும் அதற்குப் பின்னரும் சிங்கள இராணுவம் கடத்திய  தங்கள் பிள்ளைகள் இன்று வரை எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத இளைஞர்களின் பெற்றோர்களும் வாக்களித்துள்ளார்கள். மேலும் சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டு வீச்சில் தான் பெற்றெடுத்த பச்சிளங் குழந்தைகளை இழந்த தாய்மார்கள் வாக்களித்துள்ளார்கள். தாங்கள் வாழ்ந்த இடங்களை அபகரித்து அங்கு சிங்கள இராணுவ முகாம்களை ஏற்படுத்திய அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இவர்களின் வாக்குதான் சிங்கள பெளத்த இனவாத அரசின் முன்னெற்ற முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறது. இந்த வெற்றியை எந்த வித்திலும் ராஜபக்ச அரசும், அதற்கு எல்லா வழிகளிலும் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசும் தங்களது ஜனநாயக முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கூறிக்கொண்டால் அதைவிட பெரிய ஏமாற்று இருக்க முடியாது. எனவே தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை முடிவு செய்ய ஐ.நா. வாயிலாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments