வடக்கு மாகாண சபை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் சந்திரலிங்கம் சுகிர்தனின் முக்கிய தேர்தல் செயற்பாட்டாளர் நிஷாந்தன் சுவிகரன் சற்று முன்னர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்படுள்ளார்.
காரைநகர் செல்லும் வீதியில் கல்லுண்டா வெளியில் இவரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், தமிழ்த் தேசியத்துக்காக வேலை செய்கிறாயா? நீதானா யாழ் கலாசாரத்தின் காவலனா? என்று கேட்டு இவர் மீது பொல்லுத் தடிகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான நிஷாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலிஸ் பிரிவினரால் வாய்மூல முறைப்பாடு பதிவு செய்யப்படுள்ளது.
தனது பிரத்தியேக செயற்பாட்டாளர் தாக்கப்பட்டது தொடர்பாக சுகிர்தன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசியத்துக்காக பாடு படுபவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான அடக்கு முறைகளையும் அடாவடிகளையும் காட்டி எமது வெற்றியையும் சேவைகளையும் தடுக்க முடியாது.
கடந்த ஒரு வாரமாக எனது ஆதரவாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தி எனது பிரசாரத்தை முடக்கும் வகையிலும் அரச சக்திகள் தொழிற்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
நான் இளைய தலைமுறைகளின் வளர்ச்சிக்காக பாடு படுபவன், இளைய சமுதாயம் தாக்கப்படுவதை நான் பார்த்து கொண்டு இருக்க மாட்டேன். எமது வெற்றியின் பின்னர் எமக்கான அதிகாரம் கிடைக்கும் போது அனைத்து எதிரணி சக்திகளும் வாய் மூடி நிற்க வேண்டும். ஏனெனில் நாம் இளைஞர்கள் எதிர்கால வளர்ச்சியின் தூண்கள் என்றார்.
No comments
Post a Comment