யாழ். காரைநகர் பிரதேச செயலக திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனிவிரட்ன இலங்கை தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிவைத்தார்.
தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி உடனடியாக இறக்கப்பட்டு மீண்டும் நேராக எற்றி வைக்கப்பட்டதால் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
நேற்றுக் காலை 10.30 மணியளவில் காரைநகரில் புதிதான நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டிடத்தினை திறந்துவைக்க வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் மேற்படி அமைச்சரும் பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர், ஜக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் அழைத்துவரப்பட்டனர்.
இதன் பின்னர் மேற்படிக் கட்டிடத்தின் முன்பாக இருந்த இலங்கைத் தேசியக் கொடியினை ஏற்றிவைத்திருந்தார். இதன் போது தேசிய கீதமும் தமிழில் இசைக்கப்பட்டது. தலைகீழாக தான் கொடியேற்றுவதை அவதானிக்காத அமைச்சரும் அவருடன் இணைந்து வருகைதந்த விருந்தினர்களும், இசைக்கப்பட்ட தேசிய கீதத்திற்கு மதிப்பளித்து நின்றிருந்தனர்.
எனினும் அங்கு நின்ற ஒருவரால் தேசியக் கொடி தலைகீழாக இருப்பதை அவதானித்து அமைச்சரிடம் கூறினார். இதன் பின்னர் உடனடியாக கொடி இறக்கப்பட்ட மீண்டும் சரியாக ஏற்றி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் அங்கு கட்டப்பட்டிருந்த கொடி சரிவர கட்டப்பட்டிருந்தது. எனினும் கொடியினை ஏற்றிவைத்த அமைச்சர் செனிவிரட்ன கொடியேற்றும் கயிற்றுக்குப் பதிலாக மற்றைய கயிற்றினை பிடித்து ஏற்றிவைத்ததாலேயே தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது என்று தெரியவந்தது.
No comments
Post a Comment