பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் பங்கேற்காத முதலாவது அமர்வாக, எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாற்பது ஆண்டுகளாக நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய மஹாராணி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தடவையாக மஹாராணி இம்முறை அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என பக்கிங்ஹாம் மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய மஹாரணிக்கு பதிலாக இளவரசர் சார்ள்ஸ் அமர்வுகளில் பங்கேற்க உள்ளார்.
இதேவேளை, இம்முறை அமர்வுகளில் பங்கேற்கப் போவதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். பிரதமராக தெரிவானமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்த போது, அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாக அப்போட் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இந்த அமர்வுகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment