Latest News

August 11, 2013

பள்ளிவாசலை அகற்ற கூடாது, சம்பிக்க காட்டமான வார்த்தைகளை பிரயோகிப்பதை நிறுத்த வேண்டும்: தவ்ஹீத் ஜமாத்
by admin - 0

கொழும்பு, கிராண்ட்பாஸ் மோலவத்தை பள்ளிவாயலை அவ்விடத்திலிருந்து எக்காரணம் கொண்டும் அகற்ற கூடாது. மேலும் இந்த பள்ளிவாயல் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் தமது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முஸ்லிம் எம்.பி. அமைசர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டிய நிலை உருவாகும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்ததாவது,

நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினர் காவியுடையணிந்த சிலரும் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக திரண்டனர்.

மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள் பள்ளிவாயல் முழுவதும் சேதமடையும் அளவுக்கு கடுமையாக தாக்கினார்கள்.

பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மட்டுமன்றி பள்ளி முழுவதுமாக தாக்கப்படும் வரை அவர்கள் எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் பள்ளிவாயலின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் கேட் அகற்ப்பட்டு அருகில் இருந்து அழுக்கு ஓடைக்குள் வீசியெறியப்பட்டுள்ளது. பள்ளியை தொடர்ச்சியாக உடைத்து நாசமாக்கும் முயற்சியில் குறித்த குழுவினர் முகாமிட்டிருந்தார்கள். அங்கு கூடியிருந்த அக்குழுவினரை பொலிசார் வெளியேற்றாமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு சென்ற தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உடனடியாக அவர்களை கைது செய்து பள்ளியின் இடத்தை விட்டும் அவர்களை அப்புரப்படுத்துமாறு பொலிசாரிடம் வேண்டிக் கொண்டார்கள். இருப்பினும் போலிசார் அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த இடத்தில் இருந்து வெளியேற்றவோ முயலவில்லை.

ஆனால் பள்ளியை உடைக்க வந்த காடையர்களை வெளியேற்றுவதை விடுத்து பள்ளியை பாதுகாப்பதற்காக அங்கு கூடிய முஸ்லிம்களை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் பொலிஸார் கருத்தாக இருந்தார்கள்.

பல தடவை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுடன் கலைந்து செல்லுமாறு பொலிசார் பேச்சுவார்தை நடத்தினார்கள். இருப்பினும் பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும் வரை நாம் கலைய மாட்டோம் என்றும் எங்கள் உயிரைக் கூட இதற்காக இழப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்து குரல் கொடுத்தார்கள்.

இந்நிலையில் இன்று காலை சிஹல ராவய இயக்கத்தினர் பாதிப்பை உண்டாக்க வந்தார்கள். பொலிசார் அவர்களை தடுத்து அனுப்பினார்கள். எனினும் இந்த தாக்குதல் பின்னணியில் சிங்கள ராவய இருக்கின்றதோ எனவும் எமது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் சம்பிக்க சம்பவத்தை பெரிதும் படுத்தும் வகையில் காட்டமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். இன உறவை பாதிக்கும் வகையில் காட்டமான வார்த்தைகளை பிரயோகிப்பதை அமைச்சர் சம்பிக்க உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
« PREV
NEXT »

No comments