Latest News

August 30, 2013

பொது மக்களிடையே சமத்துவம், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே அவசியமானது - ஜனாதிபதியிடம் நவிபிள்ளை வலியுறுத்தல்
by admin - 0

பௌதிக அபிவிருத்திகளுடன் சேர்த்து பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தி ராஜபக்ஷவுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே நவநீதம்பிள்ளையிடம் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பௌதிக அபிவிருத்திகளுடன் சேர்த்து பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.

அத்துடன், சிறுபான்மையினத்தவர்களின் மதஸ்தலங்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உரியநடவடிக்கை அவசியமெனவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவசியமான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடனான ஐ.நா. ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சந்திப்பை தொடர்ந்து அங்கு ஆராயப்பட்ட விடயங்களை ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு வெளியிட்டது.

அதில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தத்தின் பின்னர் இலங்கை பெற்றுள்ள வெற்றிகள் குறித்து ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் வடக்கு மற்றும் கிழக்குக்கான தனது விஜயத்தின்போதே புனர்நிர்மாணம், மீள்கட்டுமானம், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தன்னால் அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்தவொரு பகுதிக்கும் சுதந்திமாக சென்றுவர ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு வழங்கப்பட்ட வசதி குறித்து இதன்போது ஜனாதிபதி அவரிடம் வினவினார். இதற்கு பதிலளித்த .நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதியான உமது கவனத்தை பாராட்டுகிறேன் என பதிலளித்தார். இதனையே அடுத்தே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றினையும் கவனத்திற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் நவிப்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.



இதேவேளை, காணாமல்போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் காணாமல்போதலை குற்றம் ஒன்றாக கருதி சட்டம் கொண்டுவர தீர்மானித்துள்ளமை குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன் சிறுபான்மையினத்தவர்களின் வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் விளக்கம் கோரியுள்ளார். 

இதற்கு விளக்கமளித்த ஜனாதிபதி அவ்வாறு இடம்பெற்ற சம்பவங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவை இயல்பாக இடம்பெற்றதெனவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை பரந்துபட்ட நிறுவனம் என்ற அபிப்பிராயம் பரவலாக மக்களிடம் காணப்படுவதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையானது சுதந்திரமானதாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணா திலக்க அமுனுகம, ஜெனீவாவிற்கான இலங்கையின் வதிவிட பிரதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments