Latest News

July 23, 2013

TNA சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கல்விமான் வேட்பாளர்கள்!
by admin - 0

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஓய்வு நிலை வலயக் கல்விப்பணிப்பாளர்களான திரு.தம்பிராஜா குருகுலராஜா, திரு பசுபதி அரியரட்ணம் ஓய்வு நிலைக் கிராம அலுவலரான திரு சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடந்த கலந்துரையாடலின்போது மேற்குறிப்பிடப்பட்ட மூவரும் ஏக மனதாகக் கட்சி அங்கத்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இம்மூவரும் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் கல்வி மற்றும் சமூக விழுமிய மேம்பாடுகளிற்காகத் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள் எனக் கூறினால் அது மிகையாகாது. தன்னலமற்று இவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் தொடர வேண்டும்.
எனவே தேர்தல் களத்தில் நிற்கும் இவர்களிற்கு தமது வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டிய கடப்பாடு வடக்கிலுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.

திரு தம்பிராஜா குருகுலராஜா
கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களின் வலயக் கல்விப் பணிப்பாளராக நீண்ட காலம் பணியாற்றி இரு மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான கல்வியியல் வல்லுனர்களை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். அத்துடன் கானான், நவஜீவனம் எனப்படும் சிறுவர் இல்லங்களை நிர்வகித்து பல சிறார்களை நெறிப்படுத்தியவர்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். இவர் ஒரு சிறந்த கல்விமான் என்பதுடன் சமூக சேவைகளில் பெரு விருப்புக் கொண்டதுடன் அவற்றினைச் செயற்படுத்தியும் வருபவர்.
தமிழ்த் தேசியத்திலிருந்து பிறளாதவர் என்பதுடன் பேரினவாதிகளின் அழுத்தங்களுக்கு உட்படாமல் தமிழ்த் தேசியத்திற்காக தனது பதவியினைத் துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு பசுபதி அரியரத்தினம்
இவரும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் வலயக் கல்விப் பணிப்பாளராகவும் வட மாகாணக் கல்விப் பணிமனையின் மேலதிகக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி பல்லாயிரக் கணக்கான மாணவர்களைத் தனது கல்விப்பணி மூலம் வழி நடத்தி வடமாகாணக் கல்வி நிலைக்குப் பெருமை சேர்த்தவர். சிறந்த கல்விமானாகிய இவர் தற்போது சமூகசேவைகளினை ஆற்றி வருகிறார்.
திரு சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை










முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டத்தின் ஓய்வு நிலைக் கிராம சேவையாளராகிய இவர் ஒரு ஆன்மீக வாதியாக இருப்பதுடன் சமூக சேவைகளிலும் பற்றுக் கொண்டவர். 


கடந்த காலங்களில் நெருக்கடியான நேரங்களிலும் மக்களுக்கான சேவைகளினை சாந்தமான தன்மையுடன் மேற்கொண்டவர். தற்போது பொதுத் தொண்டுகளிலும் சமூகம் சார் விழிப்புணர்வினையும் ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார்.
« PREV
NEXT »

No comments