கட்சிமாற்றம் தேசியப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தாது : தயாசிறி
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறிவிட்டதால் தேசியப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான தனது நிலைப்பாடு எப்போதும் மாற்றமடையாது என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நீதியானதும் நியாயமானதுமான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அந்தத் தீர்வானது தமிழ், சிங்கள முஸ்லிம் என அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையவேண்டும். மாறாக புலி ஆதரவு தரப்பினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வரக்கூடாது. புலி ஆதரவு புலம்பெயர் மக்களின் அழுத்தங்கள் அதில் இருக்கக்கூடாது.
அவ்வாறு எந்தவொரு தரப்பினரதும் அழுத்தங்கள் இல்லாத வகையில் எமது நாட்டுக்குள்ளேயே தேசிய அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு நாம் சென்றால் எமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை.
என்னை இனவாதியாக ஒருபோதும் பார்க்க வேண்டாம். நான் அவ்வாறு ஒருபோதும் இருந்த தில்லை. இருக்கப்போவதுமில்லை.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதனை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அதில் எந்த மாற்றமும் ஏற்படாது.
இலங்கையர் என்ற அடையாளத்துடன் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒற்றுமையாக சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். மேலும் நிரந்தரமான அரசியல் தீர்வை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமாகும் என்றார்.
No comments
Post a Comment