வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு முதல்வர் பதவிக் கனவுடன் இருந்த ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாயின், டக்ளஸ் தேவானந்தா தற்போது வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளைத் துறக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சி.வி.விக்னேஸ்வரன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியைக் கைப்பற்றும் வாய்ப்புக் கிடைக்காது என்று டக்ளஸ் தேவானந்தா கருதுவதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை வீணாக இழப்பதற்கு அவர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவுள்ள 10 ஈபிடிபி வேட்பாளர்களில் டக்ளஸ் தேவானந்தாவில் பெயர் இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஈபிடிபி சார்பில், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா, ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளர் சிறிரங்கேஸ்வரன், யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமல், இரா. செல்வடிவேல் உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால், தானே முதல்வராகும் வகையில், மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய டக்ளஸ் தேவானந்தா முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாத ஒருவரை – முதல்வராக நியமிக்க வழி செய்யும் வகையில், மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அவர் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இதன்மூலம் வேட்பாளர் பட்டியலில் இல்லாத – வெளியில் உள்ள ஒருவரை, வெற்றிபெறும் அரசியல்கட்சியின் செயலர் முதல்வராக நியமிக்க முடியும்.
ஆனால் தற்போதுள்ள சட்டத்தின் படி, அவ்வாறு செய்ய முடியாது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல், ஆளும்கட்சி வெற்றிபெற்றால் முதல்வராகும் நோக்கிலேயே, அரசியல்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு டக்ளஸ் தேவானந்தா இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே, யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு 8 வேட்பாளர்களுக்கும், லங்கா சமசமாசக் கட்சிக்கு 1 வேட்பாளருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், தயா மாஸ்டர், நெல்லியடி வர்த்தகர் அகிலதாஸ், ஐதேகவில் இருந்து கட்சி தாவிய சர்வானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாவிய றெமீடியஸ், முஸ்லிம் பிரதிநிதி சிராஸ், வலிகாமம் பகுதியில் இருந்து சுப்பிரமணியம் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லங்கா சமசமாசக் கட்சியைச் சேர்ந்த தமிழழகன் என்பனவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.
எனினும் வேட்பாளர்கள் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை.
வரும் 26ம் நாள் இது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment