தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான வேட்பாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவதாகவும், வேட்பாளர்களின் தகவல்களை பெறும் தோரணையில் வேட்பாளர்களின் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் அவர்களை அச்சுறுத்த முனைவதாகவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி சஜந்தனின் சாவகச்சேரியில் உள்ள வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற இராணுவத்தினர் அவரது விபரங்களை கோரியுள்ளனர். தான் ஒரு சட்டத்தரணி என்றும் இராணுவத்தினர் தன்னிடம் விபரங்களை கோர முடியாது என்றும் தெரிவித்த குறித்த வேட்பாளர் இராணுவத்தினரை திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை வடமாகாணசபைக்கான வேட்புமனுக்களை ஐந்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்திருந்தது.
யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் சட்டத்தரணி சஜந்தன் போட்டியிடுகின்றார். யாழ். மாவட்ட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு சில மணி நேரங்கள் கடப்பதற்கு முன்னர் அவரது வீட்டிற்கு மூன்று தடவைகள் வந்த இராணுவத்தினர் விபரங்களை கோரியுள்ளனர். இராணுவத்தினரின் இந்தச் செயற்பாடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை அச்சுறுத்துவதற்கான நடவடிக்கையாகும். இதனை கூட்டமைப்பு கண்டிக்கின்றது. இவ்விடயம் குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பதுடன் சர்வதேசத்தின் கவனத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கொண்டுவரும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தல் நீதி நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மத்தியில் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் ஐந்து மாவட்டங்களிலும், வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டினை நடத்திய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இந்த சந்தேகத்தை கிளப்பியிருந்தார்.
மாகாணசபை தேர்தல் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே நடைபெறுகின்றது. இத்தேர்தல் நியாயமானதாகவும், நீதியானதாகவும், ஜனநாயக விதி முறைகளுக்கு அமையவும், நடைபெறவேண்டியது அவசியமாகும் என்று சம்பந்தன் எம்.பி.வலியுறுத்தியுள்ளார்.வடமாகாணசபைத் தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதற்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப்படவேண்டும். மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு மக்களுக்கு போதிய சுதந்திரம் வழங்கப்படவேண்டும். அத்தகையதொரு தேர்தலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. ஆனால் நீதி நியாயமான தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து எமக்கு பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதற்கு போதிய நியாயங்களும் உள்ளன என்றும் சம்பந்தன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாணசபைக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகிய பின்னர் நீதி, நியாயமான தேர்தல் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு சந்தேகம் தெரிவித்து வருகின்றது. வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படவேண்டுமென்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டுமென்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தே வருகின்றன.
ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. சர்வதேச கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு மாத்திரம் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிணங்க தேர்தல் திணைக்களமும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுவதானது சுதந்திரமான நீதியான தேர்தலுக்கு வழிவகுக்கப்போவதில்லை. வடமாகாணத்தில் இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தலின் போதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதுடன் அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. இத்தகையதொரு நிலைமை இந்தத் தேர்தலிலும் ஏற்படலாம் என்ற அச்ச நிலைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமையினால் நீதி நியாயமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியே வந்தது. அதனை சரியென நிரூபிக்கும் வகையில் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அச்சுறுத்தும் படையினரின் செயற்பாடு கூட்டமைப்பின் குற்றச்சாட்டிற்கு வலுசேர்ப்பதாகவே அமைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்கினேஸ்வரன் வேட்புமனுதாக்கல் செய்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைவிட 13 ஆவது திருத்தச் சட்டத்தினை எந்தளவிற்கு நடைமுறைப்படுத்தப்போகின்றோம் என்பது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எமக்கு வழங்குகின்ற ஆதரவிலேயே தங்கியுள்ளது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கட்சியாக கூட்டமைப்பு திகழ்வதனால் எமது கட்சி வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. வடமாகாணசபைத் தேர்தல் எமக்குக் கிடைத்த சந்தர்ப்பமாகும். இதனைப்பயன்படுத்தி நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டு இத்தேர்தலில் செயற்படவேண்டும். நாம் ஒற்றுமையாக நின்று செயற்படும் போது பல விடயங்களை சாதித்துக்கொள்ள முடியும் என்றும் நீதியரசர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
வடக்கு மாகாணசபைக்கான கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரின் இத்தகைய கருத்தானது வரவேற்கத்தக்கதாகும். அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமைப்படவேண்டும். இதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை அவர் ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் வடமாகாணசபைத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தி மக்களின் ஆதரவைப் பெற்று அங்கு ஆட்சியை கைப்பற்றுபவர்களுடன் பேச்சுக்களை நடத்தி ஓர் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியது இன்றியமையாததாகும். வடக்கில் முதலமைச்சராக சி.வி. விக்கினேஸ்வரன் வருவாரேயானால் அவருடன் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கூறியுள்ளார்.
தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று அலரிமாளிகையில் சந்தித்து பேசியபோதே ஜனாதிபதி இத்தகைய கருத்தினை வெளியிட்டுள்ளார். எனவே வடக்கு மாகாணசபை தேர்தலில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட முயலாது சுதந்திரமான தேர்தலுக்கு வழிவகைகள் செய்யப்படவேண்டும். அதன் மூலமே இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் நற்பெயரை ஏற்படுத்த முடியும்.
வடமாகாணசபைத் தேர்தல் செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதை தடுப்பதும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றது. இதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுவது சிறந்ததாகவே அமையும்.
No comments
Post a Comment