Latest News

June 02, 2013

வயோதிபப் பெண் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை; மூவர் கைது!
by admin - 0

வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணொருவரை பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ள சம்பவமொன்று நீர்கொழும்பு திவுலப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது 59
வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான மஞ்சநாயக்க ஆரச்சிலாகே நோனா பிரேமாவதி என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்த பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாகவும், ஏனையோர் அச்சந்தேக நபருடன்
மது அருந்தியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. திவுலப்பிட்டிப் பகுதியில் நான்கு பேர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். மதுபானம்
தீர்ந்துபோனதும் அவர்களில் ஒருவர் மதுபானம் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அவ்வாறு சென்றவரே தனிமையில் இருந்த
பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனை பெண்ணின் வீட்டில் கீழ் பகுதியில் இலத்திரனியல் உபகரணங்களை பழுதுபார்க்கும்
நிலையத்தை நடத்தி வரும் நபர் அவதானித்துள்ளார். வீட்டின் கீழ்ப்பகுதியிலேயே அந்த நிலையம்
உள்ளது. மேல் பகுதியில் பெண்ணின் வீடு உள்ளது. அவர்கள் அந்தக்
கடையை வாடகைக்கு வழங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாவது, வீட்டிற்குள் வந்த சந்தேக நபர் குறித்த பெண்ணிற்கு அறிமுகமானவர் எனத்தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் வீட்டிற்கு மதுபோதையில் நுழைந்து, பெண்ணை படுக்கை அறைக்குள்
வைத்து வல்லுறவு புரிந்துள்ளார். இதன்போது அப்பெண் எதிர்த்துப்
போராடவே அவரது தலையை சந்தேக நபர் கட்டிலின் விழிம்பில் மோதியுள்ளார். இந்நிலையில் அப்பெண் தப்பியோடி சமையலறைக்குள் புகுந்துள்ளார். அங்கு வைத்து பெண்ணின் கேசத்தை பிடித்து இழுக்கவே அவர் நிலத்தில் வீழ்ந்துள்ளார். இதனை அடுத்து சந்தேக நபர் பெண்ணின் தலையை நிலத்தில் மோதி கொலை செய்துவிட்டு சடலத்தை குளியலறையில்
மறைத்து வைத்து விட்டு வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்த சந்தேக நபரிடம் இலத்திரனியல் உபகரணங்களை பழுதுபார்க்கும்
நபர் விசாரித்துள்ளார். சந்தேக நபர் அன்ரியை பார்க்க வந்ததாகவும் அவர் வீட்டில் இல்லையெனவும்
தனது நண்பர்கள் தனக்காக காத்திருப்பதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். இது தொடர்பில் சந்தேகமடைந்த கடை நடத்துனர் பொலிஸ் அவசர பிரிவிற்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். பிரதான சந்தேக நபரும் அந்த இடத்துக்கு வந்துள்ளார். இதனை அடுத்து பொலிஸார் பிரதான சந்தேக நபர் உட்பட சந்தேக நபருடன் மதுபானம் அருந்திய மேலும் இருவரையும் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments