Latest News

May 21, 2013

நெடுங்கெணி பாடசாலை சிறுமி வன்கொடுமை சூத்திரதாரியான இராணுவச் சிப்பாய் கைது
by admin - 0


நெடுங்கேணி சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவார காலங்களுக்கு மேலாகியும் இன்னமும் கைது செய்யப்படாதுள்ளார். இதனை வன்னி மாவட்ட பிரஜைகள் குழுக்களின் இணையம் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளின் மற்றுமொரு வடிவமாகவே அவர்கள் வாழும் பிரதேசங்களில் நடந்தேறும் கலாசாரச் சீரழிவுகளும் கண்டும் காணாது விடப்பட்டு வருகின்றன. அவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வருகின்றனர்.

இதனையே நெடுங்கேணி சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவமும் எடுத்துக்காட்டி நிற்கின்றது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவார காலங்களுக்கு மேலாகியும் இன்னமும் கைது செய்யப்படாதுள்ளர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வன்னி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவமானது எதிர்கால வாழ்க்கையில் அம்மக்களை அச்சங்கொள்ள வைத்துள்ளது.

வன்னியில் வாழும் சிறுவர்கள், பெண்களுக்கு உறுதியற்ற பாதுகாப்பு சூழல் உள்ளதென்பதை எடுத்துக் காட்டுகின்றது.

தினமும் அச்சத்துடனேயே அவர்கள் காலத்தைக் கடக்க வேண்டியவர்களாகவுள்ளனர்.

இச்சம்பவமானதுபாடசாலைமாணவர்களிடத்திலும் கல்விச் சமுகத்திலும் அச்ச சூழலைத் தோற்றுவித்துள்ளது.

30 வருடகால யுத்த சூழலில் இருந்து விடுபட்டு மக்கள் அனைவரும் மீண்டும் சுமுகமாக ஓர் நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த நாட்டில் வாழும் சிறுவர், பெண்கள் மீதான அடக்குமுறை வன்முறைகள் இன்னமும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் இந்தகைய கலாசாரச் சீரழிவுகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதே ஏவிவிடப்பட்டுள்ளன. இதனை குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வதான சூழ்நிலை எடுத்துக் காட்டி நிற்கின்றது.

இச்சீரழிவுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தொடர்ந்து தப்பித்து வருகின்றார்கள்.

சிவில் சமுகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தரப்பினர் இவர்களைக் காலம் தாழ்த்தியே கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

இதனால் சம்பவமும் குற்றவாளியும் வலுவற்றவையாக்கப்படுகின்றன. இது சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றது.

இதனால் மௌனிகளாக்கப்பட்டு வரும் தமிழ் சமுகம் அதிகார வர்க்கத்தின் முன்னால் தோல்வியுற்று வருகின்றனர். அச்சமுகத்தில் உள்ள சிறுவர், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகின்றது.

எனவே இக்கொடூரமான பாதகச் செயலைச் செய்வோரை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்நாட்டு அரசாங்கமும் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு அபிவிருத்தி அமைச்சும் இதில் கவனம் எடுத்து உடனடிச் செயற்பாட்டில் இறங்க வேண்டும்.

நெடுங்கேணி சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான மிகக் கொடூரமான பாலியல் வல்லுறவுச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இப் படுபாதக செயலைச் செய்த காமுகனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இப்பிரதேச மக்கள், சிறுவர்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

வன்னி மாவட்ட பிரஜைகள் குழுக்களின் இணையம்.

(வவுனியா, மன்னார், முல்லைத்தீவு)
« PREV
NEXT »

No comments