
வவுனியா மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு வருவதற்கு சூழலியலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
1200 சிங்கள பௌத்தக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்காக, கருங்காலிக் குளத்தில் உள்ள சுமார் 1500 ஏக்கர் பரப்பளவுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக் காடுகள் கடந்த ஒன்றரை தொடக்கம் இரண்டு மாதங்களாக சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்டு வருவதாகவும், வவுனியா மாவட்டச் செயலர், பிரதேச செயலரின் உதவியுடன் வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரியே இதனை மேற்கொண்டு வருவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பணிப்பாளரான சஜீவ சமிக்கார தெரிவித்துள்ளார்.
வனத் திணைக்களத்தின் அனுமதியின்றி. தென்பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 சிங்களக் குடும்பங்கள் கருங்காலிக்குளம் வனப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டுள்ளனர்.
இது 2009ம் ஆண்டின் 65வது இலக்க வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை கடுமையாக மீறும் செயலாகும். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் நுழைந்துள்ளது மட்டுமன்றி அதனை அழித்து, வீடுகளை அமைத்து வீதிகளும் அமைக்கப்படுகின்றன.
கருங்காலிக்குளம் வனப் பகுதியில் இருந்து 8000 ஏக்கர் காணிகளை சிங்களக் குடியேற்றங்களுக்காக விடுவிக்கும்படி வனத் திணைக்களத்தை வவுனியா மாவட்டச் செயலர் கோரியுள்ளதாகவும், அதற்கு வனத் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் சமிக்கார தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment