Latest News

September 17, 2012

இலங்கை சிங்கள விளையாட்டு வீரர்களை நீக்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் !
by admin - 0

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 2 இலங்கை வீரர்களின் பெயர்கள், அணியின் இறுதிப்பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் மூலம் சிங்கள வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று, தமிழக மக்களின் எதிர்ப்புகளை சம்பாதிக்க விரும்பாமல் ஜகா வாங்கிக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 9ம் தேதி முதல் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மொத்தம் 14 அணிகள் பங்கேற்கிறது. இதில் தகுதி சுற்றில் கலந்து கொள்ள உள்ள 6 அணிகளில் வெற்றி பெறும் 2 அணிகளும், 8 அணிகள் நேரடியாகவும் என்று மொத்தம் 10 அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன. கடந்த ஐபிஎல் தொடரில் முதல் 4 இடங்களை பிடித்த இந்திய உள்ளூர் அணிகள் நேரடியாக லீக் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன. இந்தியாவை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க உள்ளன.



சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் பங்கேற்க உள்ள 14 அணிகளின் வீரர்கள் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த குலசேகரா, சூரஜ் ரந்திவ் ஆகிய 2 இலங்கை வீரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இலங்கை வீரர் மகிளா ஜெயவர்த்தனே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குலசேகராவும், ரந்தீவும் மட்டுமே இம்முறை உள்ளனர். அவர்கள் இருவரும் அணியில் இடம் பெறாதது பல கேள்விகளை எழுப்பியது. சமீபத்தில் தமிழகம் வந்த சிங்கள யாத்ரீகர்கள் மீது கடும் தாக்குதல் நடைபெற்றது. இதை இலங்கையர்கள் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்தாலும் தமிழக மக்கள் வெறும் எதிர்ப்போடு நின்று விடுவார்கள், அடிக்கும் வரை போக மாட்டார்கள் என்று நினைத்திருந்த அவர்களுக்கு இந்த அடிதடி பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதையடுத்து தமிழகத்திற்கு சிங்களர்கள் போக வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் நிலைமையை மனதில் கொண்டே சிங்கள வீரர்கள் இருவரும் தாங்களாகவே விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.


« PREV
NEXT »

No comments