Latest News

June 18, 2012

டப்பிங் பேசிய காலம்! வியக்க வைக்கும் விக்ரம்!
by admin - 0





1990களில் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை, மீரா போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார்.

திறமை இருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சியை அவர் கைவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். டெலி ஃபிலிம்களும் நடித்தார். தனக்கான அங்கீகாரத்தை இந்த திரையுலகம் ஒரு நாள் கண்டிப்பாக தரும் என்று நம்பினார், காத்திருந்தார்.

வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில் மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் பேசினார். அப்பாஸ், பிரபுதேவா போன்ற பலருக்கும் அவர் டப்பிங் பேசி இருக்கிறார். அந்த நடிகனின் திறமையை உணர்ந்து சரியான வாய்ப்பைக் கொடுத்தார் இயக்குனர் பாலா. அந்த படம் சேது. முழு அர்ப்பணிப்போடு அந்தப் படத்தில் நடித்தார் அந்த ஹீரோ.

வெளிவர முடியாத நிலையில் இருந்த சேது படம் பல தடைகளையும் தாண்டி வெளியிடப்பட்டது, பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கினார் அந்த ஹீரோ. ராசி இல்லாத ஹீரோ என்று ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டவர். வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்தார். பிதாமகன் படத்தில் தன் நடிப்பால் தேசத்தையே தன் பக்கம் திருப்பினார். தேசிய விருதையும் பெற்றார்! தொடர்ந்து ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடித்தார்.

தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்குப் பிறகு வித்தியாசம் என்ற பெயரை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அவர் தான் சீயான் விக்ரம்! 16.06.2012 அன்று 6வது விஜய் அவர்ட்ஸ் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். சிறந்த நடிகருக்கான விருது விக்ரமிற்கு வழங்கப்பட்டது. (படம் - தெய்வத்திருமகள்)

அந்த விருதை அவருக்கு வழங்கியவர் பிரபுதேவா. ஒரு காலத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் பேசியவர் தான் விக்ரம் என்ற சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. இதை அவர்கள் இருவரும் கூட உணார்ந்திருக்க கூடும். விக்ரமின் வளர்ச்சி மிக பிரம்மாண்டமானது என்பதை நாம் அந்த நேரத்தில் உணர முடிந்தது.

அதே விழாவில், சிறந்த நடிகைக்கான விருது அஞ்சலிக்கு வழங்கப்பட்டது (படம் - எங்கேயும் எப்போதும் ). ஃபேவரெட் ஹீரோ விருது அஜீத்துக்கும், ஃபேவரெட் ஹீரோயின் விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.

செவாலியர் சிவாஜி கணேசன் விருது பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கபட்டது. கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், பிரபு மூவரும் இணைந்து எஸ்.பி.பி.க்கு அந்த விருதை வழங்கினார்கள்.

« PREV
NEXT »

No comments