எந்திரன் படத்தை மறந்து விடுங்கள். அது போல நண்பன் இருக்காது. எந்திரனை மறந்து விட்டு நண்பன் படத்தைப் பார்க்க வாருங்கள் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர். கோவையில் நண்பன் படத்தின் பாடல் வெளியீடு நடந்தது. ஷங்கர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, த்ரி இடியட்ஸ் திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.
திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார். நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.
எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள் என்றார் ஷங்கர். நண்பன் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க அவருடன் ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
No comments
Post a Comment