Latest News

September 10, 2011

விவசாய நிலத்தை பாழ்படுத்தும் செயற்கை உரங்கள்: இயற்கை விவசாயமே தீர்வு!
by admin - 0

விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், நிலத்தில் உள்ள மண் புழுக்கள் மடிந்து, நிலம் பாழாகிறது. உணவு தானிய தாவரங்களில், பூச்சி தாக்குதலை சமாளிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறி வருகிறது. "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' அடிப்பது போல், இயற்கை விவசாயத்திற்கு மாறினால், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்..ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மண்ணில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட்டு, மண் வளம் குறைந்து, உற்பத்தி திறனும் குறைந்து விட்டது.தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரசாயன உரங்களை, விவசாயிகள் இன்னமும் பயன்படுத்தித் தான் வருகின்றனர்.அந்த உரம், வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது ஒரு வகையில் பாதிப்பு தான். ஆனால், இதை விட அதிக பாதிப்பு, விவசாய நிலங்களில், பூச்சிக்கொல்லிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த பயன்படுத்தும், பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படுகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், உலக சுகாதார மையம், ஒரு சில பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தாக்கத்தை வெளிப்படுத்தி, அதை தடை செய்து உத்தரவிட்டது. அந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் டி.டி.டி., மற்றும் எறும்பு பொடி எனப்படும் குறுணை மருந்துகளே.பூச்சி தாக்குதலை சமாளிக்க இந்த மருந்துகளை, விவசாய நிலத்திலுள்ள செடியின் மீது, விவசாயிகள் தெளிக்கின்றனர்.


செடியின் மீது விழுந்த பூச்சிக்கொல்லி பொடி, செடி பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் உள்ள புற்களில் படிகிறது. புற்களின் வேர்கள், மருந்தை உறிஞ்சுகிறது. அந்த புல்லை, பசு மாடு மேய்கிறது. மாட்டின் பாலை சூடு செய்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடுகின்றனர். அந்த பாலை சாப்பிடும், ஒரு கர்ப்பிணி தாயின் மார்பில் சுரக்கும் பால், பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது.புல், பசு மாடு, மனிதர்கள் என பல நிலைகளை கடந்தும், அந்த பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம், பசுவின் பாலிலும், அதை சாப்பிடும் பெண்ணின் உடம்பிலும், அந்த பெண்ணின் உடலில் சுரக்கும் தாய்ப்பாலிலும், அந்த பாலை பருகும் பிறந்த குழந்தையின் உடலிலும் இருப்பதை, உலக சுகாதார மையம் வெளியிட்டது.அளவுக்கு அதிகமாக, ரசாயன உரங்களை விவசாய நிலங்களில் இடுவதால், நிலம், பயிர் மற்றும் அதில் விளையும் உணவு தானியங்கள் விஷமாகின்றன. இது இல்லாமல், அதிகப்படியான உரம் அல்லது உரத்தில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், பாசன நீரில் அடித்துச் செல்லப்படுவதால், நீர் நிலைகள் விஷமாகின்றன.ரசாயன உரங்களின் கழிவுகளிலுள்ள நைட்ரஜன் மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களால், நீர் நிலைகளில், "பச்சை பசேல்' என பாசிகள் படர்கின்றன. இதனால், நீர் நிலைகளில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு, நீர் நிலை விலங்குகள் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments