Latest News

July 25, 2011

தேர்தல் தோல்விக்கு நானே காரணம்: கருணாநிதி
by admin - 0

"தேர்தல் தோல்விக்கு நானே காரணம்,'' என்று பொதுக்குழு முடிவில், செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.கோவையில், நடந்த தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், 2,050 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு முடிவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:காங்கிரஸ் கூட்டணி உள்ளது உள்ளபடியே தொடரும். மத்திய அமைச்சரவையில் இரண்டு பதவிகள் காலியாக உள்ளன; அவை தி.மு.க.,வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நிரப்பும்படியும் பிரதமர் மன்மோகன் கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த காலியிடம் அப்படியே தான் இருக்கும். அவற்றை நிரப்ப தி.மு.க., முனையாது; ஆனாலும், கூட்டணி தொடரும். 
இது குறித்து, நானும், பொதுச்செயலர் அன்பழகனும், எம்.பி.,க்களிடம் பேசி எடுத்த முடிவு இது.காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி எதுவும் இல்லை. அதிருப்தி இருப்பதாக சிலர் கூட்டம் போட்டு பேசி வருகின்றனர். அவர்கள் குறித்தும் பொதுக்குழு கூட்டத்தில் பேசப்பட்டது.
ஒட்டு மொத்த சி.பி.ஐ.,யை நான் குறை கூறவில்லை. அதிலுள்ள அதிகாரிகள் சிலர், உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.தி.மு.க., தலைமையை மாற்றுவது என்பது எளிதல்ல. மீடியாக்கள் தான் தி.மு.க., தலைமை எப்போது மாறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. தி.மு.க., தலைமை, சட்டதிட்டத்தின்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகிறது; இஷ்டத்துக்கு மாற்ற முடியாது. கீழ்மட்ட பொறுப்பிலும் இப்போது எந்த மாற்றமும் இருக்காது.
இந்த கூட்டத்தில் அழகிரி நேற்றும் பங்கேற்றார்; இன்றும் பங்கேற்றார். அவர், கூட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ம.க., மாறி மாறி கருத்து தெரிவித்து வருவதாக கேட்கின்றனர். தேர்தல் தோல்விக்கு நானே காரணம் என்று பொதுக்குழுவில் கூட தெரிவித்துள்ளேன்.இவ்வாறு, கருணாநிதி தெரிவித்தார்.
முன்னதாக, பொதுக்குழுவில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில், ""தலைமை மாற்றம் குறித்து இப்போது எதுவும் பேச வேண்டாம். கட்சி வளர்ச்சியை முக்கிய இலக்காக கொண்டு செயல்படவேண்டும். தற்போது சாதாரண ஆர்ப்பாட்டம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது; எதிர்காலத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
தேர்தல் தோல்வி அசைக்காது:சென்னை: ""தி.மு.க.,வை நிலைகுலையச் செய்யும் ஆற்றல் தேர்தலுக்கு இல்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
கோவையில், நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தை துவக்கி வைத்து, கருணாநிதி பேசியதாவது:கோவையில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பெரிய கலவரங்கள் தோன்றும், பெரிய அமளிகள் ஏற்படும் என எண்ணியவர்கள் எல்லாம் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே ரீதியில், பொதுக்குழு கூட்டத்தையும், கட்டுப்பாட்டோடு, அமைதியோடு நடத்த வேண்டிய பெரும் பொறுப்பில் இருக்கிறோம். தி.முக., பொதுக்குழு கூடுவது ஒரு சட்டதிட்டத்தின்படி ஏற்பட்ட ஒன்று.
தேர்தல் தோல்விகளை எண்ணி யாரும் வருந்தத் தேவையில்லை. ஏனென்றால், தேர்தல் என்பது தி.மு.க.,விற்கு இலக்கல்ல. அதில் வெற்றி பெறுவதென்பது தி.மு.க.,வின் விடாப்பிடியான கொள்கையும் அல்ல. நாம் நடந்து செல்லும் பாதையில், மக்களுடைய ஆதரவை எந்தளவிற்கு பெற்றுள்ளோம் என்ற கணக்கைப் பார்ப்பதற்கான ஒரு வழியே தேர்தல் தவிர; அதுவே முடிவு அல்ல. அந்த வகையில், இந்த தேர்தல் தோல்வி நம்மை அசைக்காது. தி.மு.க.,வை நிலைகுலையச் செய்யும் ஆற்றல் தேர்தல் வெற்றி, தோல்விகளுக்குக் கிடையாது.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
தி.மு.க., வினர் மீது கை வைத்தால்கோவையில் கருணாநிதி ஆவேசம்:கோவை:""தி.மு.க.,வினர் மீது கை வைத்தால் என்னவாகும்'' என்று இக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்து கருணாநிதி ஆவேசத்துடன் பேசினார்.தி.மு.க., வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூரில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில், 2050 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தி.மு.க.,வினர் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அ.தி.மு.க., வின் அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் நிறைவில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தி.மு.க.,வினர் மீது அ.தி.மு.க., அரசு கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. தி.மு.க., மீது கை வைத்தால் என்னவாகும்...? இதை நான் வன்முறையாக சொல்லவில்லை. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது; இதை நான் அறிவுரையாகத்தான் சொல்கிறேன்.






காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க., விலக வேண்டும் என சில பத்திரிகைகள் விரும்புகின்றன; அதற்கேற்ப அவை செயல்பட்டு வருகின்றன. காங்கிரசுடனான கூட்டணி தொடரும். காங்கிரஸ் கூட்டணிக்கு சில காங்கிரசாரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நாங்கள் கூட்டணியை தேடி அலைபவர்கள் அல்ல. தி.மு.க., வலிமையான கட்சி; தன்னைத்தானே நிலை நிறுத்திக்கொள்ளும் பலம் உண்டு. காங்கிரசுடன் உறவு தொடரும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தாலும், தி.மு.க.,வுக்குள்ள ஓட்டு வங்கி குறையவில்லை. மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. எனவே, தி.மு.க.,வினர் மீது தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை சரியல்ல.இவ்வாறு, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசத்துடன் பேசினார்.பொதுக்குழு கூட்டத்திற்கு பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கருணாநிதியின் பேச்சை சில பத்திரிக்கைகளுக்கு மட்டும் நேற்றிரவு செய்தி குறிப்பாக வழங்கப்பட்டன.Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments