Latest News

July 10, 2011

டில்லி சென்ற ரயில் கவிழ்ந்தது :200 பேர் காயம்-35 பேர்பலி ; மீட்பு பணிக்கு ராணுவம் விரைகிறது
by admin - 0

மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து டில்லி சென்ற பயணிகள் ரயில் உ .பி., மாநிலத்தில் மால்வோ அருகே சென்ற போது ரயில் கவிழ்ந்தது. இதில் சிக்கி 200 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தாலும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சமீப காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது கடந்த வாரம் உத்தரபிரதேசம் கன்சிராம்நகர் அருகே ஒரு ரயில் வேன் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர். நக்சல்கள் ரயில் கவிழ்ப்பு சம்பவம் குறைந்திருந்த நேரத்தில் தற்போது ரயில் விபத்து அதிகரித்துள்ளது என்பது வேதனையான விஷயம். 

இன்று காலை ஹவுராவில் இருந்து டில்லி நோக்கி புறப்பட்ட கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் பேட்பூர் மாவட்டத்தில் மால்வா ஸ்டேஷன் அருகே தடம் புரண்டது. ரயில் தடம் புரண்ட நேரத்தில் 108 கி.மீட்டர் வேகத்தில் சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்தனர். 15 பெட்டிகள் முழுமையாக சேதமுற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பயணிகள் அலறல் சப்தம் கேட்டபடி உள்ளது. ரயில் கவிழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இது வரை 35 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கிறது. ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விபத்து நடந்த காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரதமர் அவசர உத்தரவு : விபத்து குறித்து ரயில்வே வாரியதலைவரை அழைத்து முழு விவரத்தை கேட்டறிந்தார். மீட்பு பணிகள் தொய்வு இல்லாமல், முழு கவனத்துடன் செய்து காயமுற்றவர்களுக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மீட்பு பணியில் ராணுவம்: ரயில் பெட்டிகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும்என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து மீட்பு பணியில் ஈடுபட ராணுவத்தின் உதவியை ரயில்வேத்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

அதிகாரிகள் சொல்வது என்ன ? : ரயில்வே துறை வடக்கு மீட்பு படை மேலாளர் பிரதீப் ஓஜா கூறுகையில்; இந்த ரயில் விபத்து 12. 30 மணியளவில் நடந்துள்ளது. பலர் ரயில் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. மொத்தம் 13 பெட்டிகள் முழு அளவில் சேதமடைந்துள்ளன. ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பெட்டிகளை வெல்டிங் மூலம் பிரித்து எடுக்கும் பணி நடந்து வருகிறது. காயமுற்றவர்கள் 17 கி.மீட்டர் தொலைவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த சம்பவம் குறித்து வடக்கு ரயில்வே துறை ஜெரல் மானேஜர் ஜோஷி கூறுகையில் ; ரயில் கவிழ்ந்தது எப்படி என்பதை இப்‌போது ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. நாங்கள் இப்போது மீட்பு பணியில் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரயில் விபத்து குறித்து விசாரணை: இந்நிலையில் ரயில்வே நிர்வாக மேலாளர் சந்திரலேகா முகர்ஜி கூறுகையில், சம்பவம் நடந்தஇடத்திற்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வர ஹவுராவிலிருந்து படேபுருக்கு ஒரு சிறப்பு ரயிலும், டில்லியிலிருந்து கான்பூருக்கு மற்றொரு சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என்றும் இந்த ரயில்கள் நாளை மாலை 7.30 மணியளவில் புறப்படும் என கூறினார். மேலும் அவர் இந்த ரயில் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு கமீஷனர் பல்பீர் சிங் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு ரயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல் மற்றும் அவருடன் உயர் அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.

மீட்பு பணிகள் தொடர்பாக உறவினர்கள் கீழகண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம் என பல்வேறு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இதன் விவரம் வருமாறு:

அலிகார்: - 057 -2403055, கான்பூர்- 0512- 2323015, குர்ஜா- 05738- 253085, மிர்சாபூர்- 05442- 220095அலகாபாத்- 05322408128.

« PREV
NEXT »

No comments