Latest News

June 13, 2011

பயிர்களில் ஏற்படும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த...
by admin - 0

பயறுவகைப் பயிர்கள், எள், வெண்டை, கொத்தமல்லி, பூசணி வகைப்பயிர்கள் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு....
உங்கள் பயிரின் இலைகளின் மேல்பகுதியில் சாம்பல் போன்ற வெள்ளை நிற தூள் படிந்திருக்கிறதா என்றும் அந்த இலையின் அடிப்பகுதி பச்சையம் இழந்து மஞ்சள் நிறமாக மாறியுள்ளதா என்றும் கவனியுங்கள். அப்படிக் காணப்பட்டால் உங்கள் பயிர் சாம்பல் நோயினால் பாதிக்கப் பட்டிருக்கலாம். சாம்பல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
நோய்க்கு உகந்த காலம்: தற்போது நிலவும் காலை குளிர் மற்றும் பனி பெய்கின்ற சூழ்நிலை இந்த சாம்பல் நோய் பரவ ஏற்றதாகும். இது குறிப்பாக பயறு வகைப் பயிர்கள், எள், வெண்டை, பீன்ஸ், பூசணி வகைப்பயிர்களில் எளிதில் பரவும்.
நோய் அறிகுறிகள்: இந்நோய் பாதிக்கப்பட்ட பயிரின் இலைகளின் மேல்பகுதியில் சாம்பல் போன்ற வெள்ளை நிற தூள் படிந்திருக்கும். இலையின் அடிப்பகுதி பச்சையம் இழந்து மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். இந்நோய் தீவிரம் அடைந்தால் இலைகளின் கீழ்பகுதியிலும் சாம்பல் போன்ற வெள்ளை நிறம் படிந்திருக்கும். விரைவில் இந்த இலைகள் உதிர்ந்துவிடும்.
கட்டுப்படுத்த வழிமுறைகள்: இந்நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டசிம் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இலைகளின் மேலும் கீழும் இம்மருந்து நனையும்படி தெளிக்க வேண்டும். நனையும் கந்தகம் எனில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து பூசணிப்பயிர் தவிர மற்ற பயிர்களில் தெளிக்க வேண்டும். கந்தகம் பூசணி பயிரின் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது.
டாக்டர் ந.முருகேசன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்
பருத்தி ஆராய்ச்சி நிலையம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125. 
« PREV
NEXT »

No comments