Latest News

July 02, 2019

விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து….!! தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது
by admin - 0

தமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல சான்றுகள் இருக்கின்றன.

ஆதி காலம் தொட்டு இன்று வரை இலங்கையில் தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவை பாதுகாக்கப்பட்டு வந்ததை யாரும் மறுக்க முடியாது.

அந்த வகையில் திருகோணமலையில் விடுதலைப்புலிகளினால் பாதுகாக்கப்பட்ட கந்தளாய்க் குளத்தின் வரலாற்றினைப் பற்றி சற்று நோக்குவோம்.

கந்தளாய் குளம்...

திருகோணமலை - கந்தளாய், தம்பலகாமம் மற்றும் அதை அண்டிய விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்கும் ஒட்டு மொத்த திருகோணமலையின் குடி நீர் விநியோகத்துக்கும் கந்தளாய் குளமே பயன்படுகின்றது.

பண்டையில் திருகோணமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.

மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது.

இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் குளக்கோட்டு மன்னர் விவாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.

பிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசாண்ட புவனேய கயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் வந்தான்.

அப்போது அவனுக்கு திடீரென கண்கள் பார்வை குன்றி குருடாகியது. மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர்.

கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி “உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும்” என்று கூறி மறைந்தார்.

அப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.

கெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்து கண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.

அடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்படலாயிற்று.

இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பின்னணி...

இன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.

பழமையில் இந்த அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இக்குளத்திலிருந்து வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.

ஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.இத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை.

ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள்.
ஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. 
நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.
1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயண மூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.
இது போக கந்தளாய் அண்மித்த பகுதி அக்போ புர என்று மெல்ல மெல்ல பெயர் மாற்றப்பட்டு வருகின்றது வென்றரசன் குளம்.
திருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். 
அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான். ஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

அணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.

இந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பில் ஆழாமல் இருக்கமுடியாது. 

இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க, இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும்.

IBC
« PREV
NEXT »

No comments