Latest News

September 06, 2017

வடக்கில் சிங்களப் பெயர் சூட்டாததால் ஒரு கட்டடம் இதுவரை திறக்கப்படாமலேயுள்ளது – வடமாகாண முதலமைச்சர்!
by admin - 0

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரால் வழங்கப்பட்ட நிதியில் கட்டப்பட்ட கட்டடமொன்றுக்கு சிங்களப் பெயர் சூட்டாததால் அக்கட்டடம் இதுவரை திறக்கப்படாமலேயுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், அவர்கள் முகம் சுழிப்பார்கள் என்பதற்காக நாங்கள் எங்கள் தனித்துவத்தை விட்டுக்கொடுத்தால் இன்னும் 20 வருடங்களில் வடக்கு மாகாணம் சிங்கள மயமாகிவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று யாழ். வீரசிங்கம் மண்டவத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் நேற்று காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியலமைப்பு விடயத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் முகம் சுழிப்பார்கள் என்பதற்காக நாம் எமது தேவைகள், அபிலாசைகள், விருப்புக்கள் என்பவற்றை மூட்டைகட்டி வைக்கவேண்டுமா?

அண்மையில் மத்திய அமைச்சர் ஒருவர் வடமாகாணத்தில் திணைக்களமொன்றுக்கு நிதியுதவியளித்திருந்தார். அந்நிதிமூலம் புதிய கட்டடமொன்று கட்டப்பட்டது. அதனைத் திறக்கவிருக்கும் நேரத்தில் அக்கட்டடத்திற்கு சிங்களப் பெயர் ஒன்று வைக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

அதற்கு எமது அலுவலகர்கள் சிங்களப் பெயர் வைத்தால் என்ன? எனத் தெரிவித்ததையடுத்து கட்டடம் திறப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நான் குறித்த திணைக்கள அதிகாரிகளிடம் ஏன் சிங்களப் பெயர் வைக்கச் சம்மதித்தீர்கள் என வினவினேன்.

அதற்கு குறித்த திணைக்கள அதிகாரிகள் அது அவர்களது பணம் தானே எனக் கூறினர். அதற்கு சிங்களப் பெயர் வைத்தால் தான் பணம் தருவதாகக் கூறினார்களா? என நான் வினவியபோது இல்லையெனப் பதிலளித்தனர்.

அப்படியெனில் அவர்கள் பணம் தந்தால் அவர்கள் கூறும் பெயர்களை வைக்கவேண்டுமென நினைக்கிறீர்களா? என வினவினேன்.

முன்னரே பல இடங்களில் சிங்களப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். அப்போது மக்கள் பிரதிநிதிகள் இருந்திருக்கமாட்டார்கள் உங்களைப் போல் அலுவலகர்கள்தான் இருந்திருப்பார். இப்போது நாம் மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்போது அதற்குச் சம்மதிக்கப்போவதில்லையெனத் தெரிவித்தேன்.

அடுத்தநாள் குறித்த அமைச்சர் எனக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து நாடளாவிய ரீதியில் குறித்த பெயரே வைத்துள்ளோம். அதற்கு நீங்கள் சம்மதிக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

ஏன் நான் சம்மதம் தெரிவிக்கவேண்டுமெனக் கேட்டபோது ஒரே நாடு என்றபடியால் பெயர்களில் ஒற்றுமை இருக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

அதற்குத்தான் நாங்கள் சமஷ்டித்தீர்வு வேண்டுமெனக் கேட்கின்றோம். எனவே நீங்கள் எங்கள் தனித்துவத்தை மதிக்கவேண்டுமெனத் தெரிவித்தேன்.

இதன்பின்னர் குறித்த கட்டடத்தை திறந்துவைக்க குறித்த அமைச்சர் வரவுமில்லை. கட்டடமும் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுமில்லை.

மற்றவர்கள் முகத்தைச் சுழி;பார்கள் என்பதற்காக நாம் எமது தனித்துவத்தை விட்டுக்கொடுத்தால் இன்னும் 20 ஆண்டுகளில் அனைத்து இடமும் சிங்கள மயமாகிவிடும்.

இன்னும் சிங்களப் பெயர் சூட்டினால் என்ன? எனக் கேட்பவர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் தமிழ்பேசும் குடியே மூழ்கிப்போய்விடும் என்பது தான் எனது பதில் எனத் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments