Latest News

May 27, 2017

மாத்தறை நகரம் முற்றாக மூழ்கும் நிலை - மக்களை வெளியேற உத்தரவு
by admin - 0

 

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக நில்வலா கங்கை உடைப்பெடுக்கும் அபாய நிலையை எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மாத்தறை பண்டாத்தார பகுதியில் இருந்து உடனடியாக மக்கள் வெளியேறுமாறு நிலையத்தினால் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நில்வலா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளப் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டுள்ள அணைகள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நில்வலா கங்கையில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் காரணமாக மாத்தறை மாநகரம் முற்றாக மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இன்று காலை பத்து மணியளவில் நில்வலா கங்கையின் வெள்ளப்பெருக்கு அசாதாரணமான முறையில் சடுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வெள்ளப்பெருக்கு அதிகரிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே ஆற்றின் இருகரைப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள வெள்ள தடுப்பு அணைகளுக்கு மேலாக நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளது.

இந்நிலை நீடித்தால் இன்னும் சில மணிநேரங்களுக்குள் மாத்தறை நகரம் முற்றாக மூழ்கும் நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகின்றது,

இதற்கிடையே காலி உடுகம பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் களனி கங்கை போன்றே களுகங்கை, கிங்கங்கை, நில்வலா கங்கை போன்ற ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

« PREV
NEXT »

No comments