இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமாக சுமுகமான முறையில் இடம்பெற்றது. இராணுவத்தினரும் மக்களின் காணிகளை படிப்படியாக விடுவிக்கும் நோக்கத்தோடு செயற்படுவதாக தெரிகிறது.
ஆகவே இப்படியான கலந்துரையாடல்கள் மூலம் நாங்கள் முன்நகரும்போது படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என்றும் தென்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவனத்தினர் தனியார் காணிகளை விடுப்பதுதான் தங்களது முதல் நோக்கம் என தீர்மானித்து அறிவித்திருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்திலே இருக்கின்ற ஒரேயொரு பிரச்சினை அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. அதாவது பல காணிகளை அரச அதிகாரிகள் தனியார் காணிகள் என்று அடையாளப்படுத்தியதை இராணுவத்தினர் அரச காணிகள் என்று நினைத்திருக்கின்றார்கள்.
காரணம் காணி சுவீகரிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியிருக்கிறது. ஆனால் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. ஆரம்பமாகியவுடனே அது அரச காணி என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள். அது பற்றி கலந்துரையாடல்களின்போது நாங்கள் விளக்கம் கொடுத்த பின்னர் அந்தக் காணிகளை தனியார் காணிகள் என்று உறுதிப்படுத்தினால் அவற்றை விடுவிப்பதாகவும் நடவடிக்கையை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
அதைவிட அரச காணிகளிலும் கூட பொது மக்களின் தேவைக்காக இருக்கின்ற பல பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவர்கள் ஒரு இடத்தில் கட்டடங்கள் அமைத்து இருக்கின்ற நிலையில் இன்னொரு இடத்திற்கு மாறுகின்ற போது கட்டடங்கள் அமைத்த செலவுகள் உண்டு. அரசாங்கம் அந்த செலவுகளை வழங்குகின்ற பட்சத்தில் தாங்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு செல்லலாம் என்று கூறுகின்றனர்.
கடந்த தினங்களிலும் அதற்கு முன்னரும் நடத்திய கலந்துரையாடலில் இருந்து இது இப்போது புலனாகிறது. இராணுவம் ஓரிடத்தில் இருந்தது. இன்னோர் இடத்திற்கு மாறுகின்ற போது அதன் செலவு பெரியதொரு தடையாக இருக்கிறது. ஆகவே நாங்கள் இது குறித்தும் அரசாங்கத்தோடு பேசி ஏதோ ஒரு விதமாக நல்லிணக்கத்தின் ஒரு படிமுறையாக எங்கேயாவது இருந்து பணத்தை பெற்றுகொடுத்தால் கூட இராணுவம் இடங்களை விடுவதற்கு தயாராக இருக்கிறார்கள் எனவே அந்த நடவடிக்கைளையும் நாங்கள் தொடர்ச்சியாக எடுப்போம்.
இரணைமடுவை சுற்றியுள்ள 2ஆயிரத்து 439 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதாக சொன்னார்கள். அது முல்லைத்தீவு மாவட்டம் என்பதால் கிளிநொச்சி கூட்டத்தில் அதனை பேசவில்லை. ஆனால் அந்தக் காணிகள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தார்கள். அதனை தவிர உறுதியாக இப்போது எனக்கு சரியான தகவல்கள் சொல்ல முடியாது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 24 ஆயிரம் ஏக்கர் காணிகள் இருந்ததாகவும் ஆனால் தற்போது 783 ஏக்கர்தான் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பாகவும் அதை படிபடியாக தாங்கள் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.அண்ணளவாக நூறு ஏக்கர் உடனடியாக விடுவிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது என்றார்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன். மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சமந்தி வீரசிங்க பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment