நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவின் பிரதமரது வாசல்த்தலம் முன்பாக மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் 26/02/2017 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
1) எமது நிலம் எமக்கு வேண்டும் கேப்பாப்புலவு மக்களின் காணியைவிட்டு இராணுவமே வெளியேறு,
2) சரணடைந்த போர்க்கைதிகள் அரசியற்கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டும்,
3)பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளையும் மக்களையும் மீண்டும் கைது செய்வதை நிறுத்து,
4) ஸ்ரீலங்காவின் தமிழின அழிப்பிறகு துணைபோன சிங்களப்பேரினவாதத் தலைவர்களையும் இராணுவத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த சர்வதேச விசாரணையே வேண்டும்,
5) பிரித்தானிய அரசே ” தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்” ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க துணைபோகாதே,
6) வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க சர்வசனவாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் .
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் இராசலிங்கம் திருக்குமரன் அவர்களும் செயற்பாட்டாளர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
கடுமையான குளிர், கொட்டும் மழை, அதிவேகமான காற்றுக்கு மத்தியில் வெட்டவெளியில் தாயகமக்களின் விடிவுக்காக இவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். உடல் உபாதை மற்றும் காலநிலை ஒவ்வாமை காரணமாக செயற்பாட்டாளர்கள் பொதுமக்களது வேண்டுதலுக்கமைவாக உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டபோதும் இராசலிங்கம் திருக்குமரன் அவர்கள் உண்ணாவிரதத்தை தனி ஒருவராக பத்தாவது நாள்வரை தொடர்ந்தவண்ணம் உள்ளார்.
7/03/2017 பத்தாவது நாளன்று மாலை மிகவும் கடுமையான சுகவீனமுற்ற நிலையில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த வேளையில் நோயாளர்காவு வண்டியில் வந்த மருத்துவ பணியாளர்களால் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு அவர்மறுத்தபோதும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார்.
எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையில் இலங்கை விவகாரம் எடுத்துக்கொள்ளப்படும் நாள் வரை பிரித்தானியப்பிரதமரின் இல்லம் முன்பாக எழுச்சி போராட்டங்களாகவும் ஆர்ப்பாட்டங்களாகவும் வெவ்வேறு விதமாக ஒவ்வொரு நாளும் போராட்டம் முன்னெடுக்கப்படும். இப்போராட்டங்களிலும் பெருமளவாக கலந்துகொண்டு எமது நிலைப்பாட்டை பிரித்தானியாவிற்கும் ஐநாவிற்கும் உலகிற்கும் ஓங்கி ஒலிக்குமாறு செயற்பாட்டாளர்களையும் பொதுமக்களையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது.“போராட்ட வடிவங்கள் மாறலாம். இலக்கு ஒன்றுதான் தமிழ் இனத்தின் விடுதலை”
No comments
Post a Comment