இலங்கை அரசாங்கம் பல ஆசிரியர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்காமல் அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டு ஆசிரியர்களைக் கௌரவிப்பதாகக் கூறி பெருமெடுப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடுவதானது அரசினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் மலையகம், வன்னிப் பகுதிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிப் பாடசாலைகளில் ஆசிரியர்களை ஆசிரிய உதவியாளர்கள் என்னும் வகுதிக்குள் வைத்து நீண்ட காலமாக அவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்யாமல் அவர்களுக்கு வெறும் 6000 ரூபா சம்பளத்தை மாத்திரம் வழங்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொள்ளையடித்து அவர்களைத் துன்பப்பட வைத்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தமது சம்பளத்தை அதிகரித்து தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்யுமாறு நீண்ட காலமாகக் கோரிவருகின்றார்கள். ஆனால் இந்த 6000 ரூபா சம்பளம் பெற்றுத் துன்பப்படும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளோ அவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளோ எதையும் இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சு எடுக்காமல் கண்மூடி இருந்து வருவதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் (ஆசிரிய உதவியாளர்களால்) இன்றைய தினமும் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்படியான நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்காமல் அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை ஒரு பக்கம் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டு இன்னொரு பக்கம் ஆசிரியர்களை மதிப்பளிப்பதாகக் கூறி ஆசிரியர் தினம் கொண்டாடி மகிழ்வது என்னவகையில் நியாயமாகும் என பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் ஏங்கி நிற்கின்றார்கள்.
No comments
Post a Comment