Latest News

October 02, 2016

நேற்று அக்டோபர் 1, 2016 அன்று கனடிய மண்ணில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு கனடா வாழ் தமிழ் மக்கள் "எழுக தமிழ்" நிகழ்வில் பங்கேற்றார்கள்.
by admin - 0

நேற்று அக்டோபர் 1, 2016 அன்று கனடிய மண்ணில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு கனடா வாழ் தமிழ் மக்கள் "எழுக தமிழ்" நிகழ்வில் பங்கேற்றார்கள்.

தாயகத்தில் 2009 இன் பின்பு மாபெரும் மக்கள்  எழுச்சியை அடக்குமுறைகளுக்குள் வாழும் தமிழீழ மக்கள் வரலாறாக்கி "எழுக தமிழ்" என்ற வரலாற்று சிறப்பு மிக்க எழுச்சியை நிகழ்த்தி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த நிலையில் இப்பொழுது கனடாவில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் ஒரு எழுச்சியை தாயக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் 2020 சர்வசன வாக்கெடுப்புக்கு வலுச்சேர்க்கவும் நிகழ்த்தி காட்டி உள்ளார்கள். 
 

"எழுக தமிழ்" நிகழ்வில் மற்றுமொரு சிறப்பாக 2009 க்கு முன்பு தமிழீழ தேசியத்துக்காக ஓரணியில் நின்ற உறவுகள் பின்னாளில் பல்வேறு அமைப்புகளாக பிரிந்திருந்தாலும் இந்நிகழ்வில் அத்தகைய அமைப்பு பேதங்கள் இன்றி பல்வேறு அமைப்புகளில் இருந்தும் தமிழ் உறவுகள் வருகை தந்திருந்தமை மகிழ்ச்சியை தந்தது. 
 

குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசு, கனடிய தமிழர் தேசிய அவை என பிரிந்திருந்த உறவுகள் ஒரே மேடையில் ஒரே அணியில் அணி திரண்டு எழுச்சி முழக்கம் இட்ட காட்சி எங்கள் தமிழினத்தின் பெருமையை பறை சாற்றிற்று.

மக்கள் மக்களுக்காக போராட நினைத்தால் பிரிவினைகள் கடந்தும் அணி திரள்வார்கள் என்ற உண்மையை எழுச்சியோடு நிரூபித்திருக்கிறார்கள். 
 
ஒரு மழையும் குளிருமான ஒரு விடுமுறை நாளில் எம் உறவுகள் இத்துணை பெரும் திரளாக அணி திரண்டமை மாபெரும் எழுச்சியாக திகழ்ந்தது.

சங்கநாதம் எழுப்பி "எழுக தமிழ் படை விரட்ட" "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்" அரசியல் கைதிகளை விடுதலை செய்" " எமது மண்ணை விட்டு இராணுவமே வெளியேறு" என்பன போன்ற முழக்கங்களோடு எழுச்சி பாடல்களும் இசைக்க நிகழ்வுகள் ஆரம்பமாயின.
 
கனடிய மண்ணின் அரசியல் பிரமுகர்கள், ஊர்சங்க, விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்த நிகழ்வில் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த இயக்குனரும் தமிழின உணர்வாளருமான தோழர் கௌதமன் அவர்களும் எழுச்சி உரையாற்றி இருந்தார்.

வருகை தந்த அரசியல் பிரமுகர்கள் தமிழினத்தின் எழுச்சிக்கு பாராட்டும் வாழ்த்தும் பகிர்ந்து எப்பொழுதும் போல் தமிழினத்தின் உணர்வுகளோடு தாமும் தோளோடு தோள் கொடுப்போம் என உறுதி கூறினார்கள் 

கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழீழ தேசிய கொடியோடு அரங்கேறி எழுச்சி கவிதைகள், எழுச்சி உரைகளை ஆற்றினார்கள். 

நிமிர்வோடு தமிழீழ தாயகத்தின் வரை படம் வைக்கப்பட்டதோடு திரும்பிய திசை எங்கும் சிவப்பு மஞ்சள் வண்ணக் கொடிகள் பறந்தன.
 
குளிர் காற்று வீசிய போதும் மழை கொட்டிய பொழுதும் குண்டு மழை நடுவே எம் உறவுகள் பட்ட வலிகளை விடவா இந்த காலநிலை எம்மை வருத்தப் போகின்றது என உணர்வோடு குடை பிடித்து நிகழ்வின் இறுதியில் பிரகடனம் வாசிக்கப்பட்டு உறுதி மொழி எடுக்கும் வரையில் இருந்தார்கள்.

தமிழ் மக்களின் போராட்டம் அடைக்கப்பட்டு விட்டது உலகப் பரப்பெங்கும் என்றிருந்த காட்சிகள் மாறி உலக தமிழினம் ஓரணியில் பேரணியாக திரண்டு நின்றது.

எழுகை கொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள். எங்கள் தமிழினம் இனி அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து எழுகின்ற காலம்..

 மங்கு தமிழ் இங்கு பொங்கு தமிழாய் இனி எழும் என்பதை கனடாவில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வும் உறுதி கூறியுள்ளது.

 

 
« PREV
NEXT »

No comments